இந்தியாவின் பணப் புழக்கத்தைப் பாதுகாக்கவும், கள்ள நோட்டு உற்பத்தியைத் தடுக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. இதன் மூலம் பணப்புழக்கத்தில் உள்ள நம்பகத்தன்மையை அதிகரிக்க வங்கி திட்டமிட்டுள்ளது.
பண நோட்டுகளின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கான ஆய்வுகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. இதற்காக நோட்டுகளில் வார்னிஷ் பூச்சுகளைப் பயன்படுத்துவது குறித்து தீவிர பரிசீலனை நடந்து வருகிறது. மேலும், நோட்டுகளின் சுகாதாரத்தைப் பராமரிக்கவும், அவை நீண்ட காலம் உழைக்கவும் நுண்ணுயிர் கொல்லி மற்றும் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை கொண்ட காகிதங்களைப் பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பணப்புழக்கத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, மார்ச் 2026 இறுதியில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 11.9 சதவீதம் உயர்ந்து 41.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், நோட்டுகளின் எண்ணிக்கை 10.5 சதவீதம் உயர்ந்து 17.1 லட்சம் கோடியாக உள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வந்தாலும், தனிநபர்கள் மற்றும் சிறு வணிகர்கள் இன்னும் ரொக்கப் பணத்தையே அதிகம் சார்ந்திருப்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.
நாணயங்களின் புழக்கமும் கணிசமாக அதிகரித்துள்ளது. நாணயங்களின் மொத்த மதிப்பு 11.4 சதவீதம் உயர்ந்து 40,814 கோடியாகப் பதிவாகியுள்ளது. பணப்புழக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது 2025 நிதியாண்டில் 11.7 சதவீதமாக இருந்தது, தற்போது 12.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
500 ரூபாய் நோட்டுகளின் ஆதிக்கம்
ரூபாய் 2,000 நோட்டுகள் புழக்கத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்ட பிறகு, தற்போது 500 ரூபாய் நோட்டுகள் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறியுள்ளன. மொத்த பண நோட்டுகளின் எண்ணிக்கையில் 41.2 சதவீதத்தையும், மொத்த மதிப்பில் 85.5 சதவீதத்தையும் இந்த 500 ரூபாய் நோட்டுகளே கொண்டுள்ளன.
கள்ள நோட்டுகளைக் கண்டறிவதில் வங்கிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. தற்போது கண்டறியப்பட்டுள்ள மொத்தக் கள்ள நோட்டுகளில் 97.6 சதவீதத்தை வங்கிகளே அடையாளம் கண்டுள்ளன. இந்தச் சூழலில், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய நோட்டுகளை 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து படிப்படியாக அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

