திருச்சி மாநகரில் திருமண வீடுகளில் நடக்கும் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், பாலக்கரை பகுதியில் நடந்த நகை திருட்டு வழக்கில் சமையல் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடந்த விபரம்
திருச்சி பாலக்கரை ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோசப் இருதயராஜின் மகன் ஆலன் என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக கடந்த 23-ஆம் தேதி குடும்பத்தினர் நகைகள் மற்றும் ஜவுளிப் பொருட்களை வாங்கி வந்திருந்தனர். அவற்றை பீரோவில் வைத்துப் பூட்டி, சாவியை அதன் அருகிலேயே வைத்திருந்தனர்.
24-ஆம் தேதி அதிகாலை அனைவரும் உறங்கிய நிலையில், மர்ம நபர் ஒருவர் பீரோவின் சாவியை எடுத்து உள்ளே இருந்த 22.5 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது நகைகள் மாயமானது தெரியவே, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது குறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையின் தீவிர விசாரணை
புகாரைப் பெற்றக்கொண்ட பாலக்கரை காவல் ஆய்வாளர் பேசில்பிரேம் ஆனந்த் தலைமையிலான அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, திருமண வீட்டுக்கு சமையல் வேலைக்கு வந்திருந்த ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடி தாலுகா முல்லைநகரைச் சேர்ந்த உசேன் (45) என்பவர் சந்தேகநபர் என்பது தெரியவந்தது.
நெல்லை பகுதியில் கைது
உசேனின் கைப்பேசி எண்ணை வைத்துத் தீவிரமாகக் கண்காணித்த காவல்துறையினருக்கு, அவர் நெல்லை மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக ஆய்வாளர் பேசில்பிரேம் ஆனந்த் தலைமையில் விஜயகுமார், செல்வம், முகமது உசேன் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை நெல்லைக்கு விரைந்து சென்று உசேனைப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து திருடப்பட்ட 22.5 பவுன் நகைகளையும் போலீசார் மீட்டனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

