Tag: PadmaShri

  • அரசு பேருந்து நடத்துநரிலிருந்து பத்மஸ்ரீ விருது வரை: 15 லட்சம் புத்தகங்கள் சேகரித்த அன்கே கவுடாவின் சாதனை

    அரசு பேருந்து நடத்துநரிலிருந்து பத்மஸ்ரீ விருது வரை: 15 லட்சம் புத்தகங்கள் சேகரித்த அன்கே கவுடாவின் சாதனை

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு இந்திய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ஜனாதிபதி மாளிகையில் கௌரவிக்கிறார். இதில் அரசு பேருந்து நடத்துநராகப் பணியாற்றிய அன்கே கவுடா என்பவருக்கு இந்த விருது வழங்கப்படுவது சமூக ஆர்வலர்கள் மற்றும் புத்தகப் பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    புத்தகங்கள் மீதான தீராத காதல்

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தின் சின்னகுரலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் 1949-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி பிறந்தவர் அன்கே கவுடா. வறுமையான குடும்பப் பின்னணி இருந்தபோதும், அரசு உதவித்தொகை மற்றும் இலவச உணவுத் திட்டங்களின் உதவியுடன் தனது மேல்நிலைப் படிப்பை முடித்தார். பின்னர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துநராகப் பணியில் சேர்ந்தார்.

    வேலையில் இருந்தாலும் கல்வி மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. மாலை நேரக் கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டமும், தொலைதூரக் கல்வி மூலம் கன்னடத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். மைசூர் பல்கலைக்கழக அச்சகத்தில் பணியாற்றிய காலத்தில்தான் அவருக்குப் புத்தகங்கள் மீதான தீராத காதல் ஏற்பட்டது. அன்றைய தினசரி வருமானத்தில் ஒரு பகுதியைச் செலவழித்து ராமகிருஷ்ண மிஷன் வெளியிட்ட சிறு புத்தகங்களை வாங்கத் தொடங்கினார்.

    வீடு முதல் நூலகம் வரை

    ஆரம்பத்தில் பாண்டவபுராவின் விஸ்வேஸ்வரநகரில் உள்ள தனது சிறிய வீட்டில் புத்தகங்களைச் சேகரித்த கவுடா, காலப்போக்கில் வீட்டின் அனைத்து இடங்களையும் புத்தகங்களால் நிரப்பினார். புத்தகங்கள் மீதான அவரது அர்ப்பணிப்பைக் கண்டு வியந்த தொழிலதிபர் ஸ்ரீஹரி கோடே, 2005-ஆம் ஆண்டு நிலம் வாங்கித் தந்து, சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட நூலகக் கட்டிடத்தைக் கட்டித் தந்தார்.

    தற்போது ‘அன்கே கவுடா புத்தக மனே’ (புத்தக இல்லம்) என்று அழைக்கப்படும் இந்த நூலகம், இந்தியாவின் மிகப்பெரிய இலவச நூலகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

    வாழ்நாள் அர்ப்பணிப்பு

    புத்தகங்களைச் சேகரிக்கும் தீவிரத்தில் தனது அரசு வேலையைத் துறந்த அன்கே கவுடா, தனது வீட்டுப் பொருட்களை விற்றுக்கூட புத்தகங்களை வாங்கினார். கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் பணியாற்றியபோது, தனது மாதச் சம்பளத்தில் 60 சதவீதத்தைப் புத்தகங்களுக்காகவே செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

    அவரது இந்த இடைவிடாத முயற்சியால், 2014-இல் கர்நாடக ராஜ்யோத்சவா விருது, கன்னட புத்தக ஆணையத்தின் சாகித்ய பரிசாரகா விருது மற்றும் சுவர்ண கர்நாடக விழாவின் அப்ரதிம ரத்னா விருது உள்ளிட்ட பல அங்கீகாரங்களை அவர் பெற்றுள்ளார். லிம்கா புத்தகப்பதிவிலும் அவரது சாதனை இடம்பெற்றுள்ளது.

    வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தியதற்கும், நூலகத் துறைக்கு அவர் ஆற்றிய அசாத்தியப் பங்களிப்பிற்காகவும் இந்திய அரசு அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கிறது.

    #padmashri #ankegouda #literature #karnataka #inspiration #பத்மஸ்ரீ விருது பெறும் புத்தகக் காதலர் அன்கே கவுடா! #bookLibrary #ankeGowda #padmaShri #award