மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், பங்கேற்ற மாணவிகளுக்கு முதலுதவி செய்த விதம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
முதல் அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 21-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அரசு பள்ளி மைதானத்தில் மாரத்தான் போட்டி ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டது. இந்தப் போட்டியைத் தொடங்கி வைத்த அமைச்சர் விஸ்வநாதன், ஓடி வந்த மாணவிகள் சிலர் கடும் களைப்பால் மேடையில் அமர்ந்து ஓய்வெடுப்பதைப் பார்த்தார்.
அப்போது, அங்கிருந்த சில மாணவிகளின் கால்களை அமுக்கி விட்டும், கால் விரல்களில் ஏற்பட்ட சுளுக்கிற்கு முதலுதவி செய்தும் அவர் இருந்தது தெரிகிறது. இந்த நிகழ்வு தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பொது இடத்தில் மாணவிகளின் கால்களைத் தொட்ட அமைச்சரின் செயல் முறையற்றது என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன.
மனிதாபிமான உணர்வால் செய்த உதவி
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நோя்க்கே இந்தப் போட்டி நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் பங்கேற்ற மாணவிகள் 4 கிலோமீட்டர் தூரம் ஓடியதால், கடும் வெயிலின் தாக்கத்தால் சிலர் மயக்கமடைந்த நிலையில், அவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது விளக்கத்தில், “ஒரு பெண்ணின் தந்தையாக, மனிதாபிமான உணர்வோடு நான் செய்த உதவிகள் தவறாகச் சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. எனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. ஏதேனும் ஒரு வகையில் எனது அணுகுமுறை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தால், அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
