Tag: Megadattu Dam

  • மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

    மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

    மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கின் பின்னணி குறித்து பார்க்கையில், மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்குத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கடந்த டிசம்பர் மாதம் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தது.

    நீதிமன்ற அறை விசாரணைக்கு தமிழக அரசு கோரிக்கை

    இந்த மறுஆய்வு மனு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி, நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் விரிவான வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளதால், மனுவை நீதிபதியின் தனி அறையில் (Chamber) பரிசீலிக்காமல், வழக்கமான நீதிமன்ற அறையிலேயே விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    மேலும், காவிரி நீர் பகிர்வு வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பிலும், அதனை ஏற்று சில மாற்றங்களுடன் 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் மேகதாது அணை திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதை தமிழ்நாடு அரசு தனது வாதத்தில் சுட்டிக்காட்டியது.

    உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவு

    கடந்த நவம்பர் 13 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, முன்னதாக நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிரானது என்பதால், அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.

    இருப்பினும், நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தமிழக அரசு தாக்கல் செய்த மனு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை விரிவாகப் பரிசீலித்த பிறகு தனது முடிவை அறிவித்தது. அதில், கடந்த 2025 நவம்பர் 13 ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்குப் போதுமான சட்டப்பூர்வ முகாந்திரங்கள் ஏதுமில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

    இதன் அடிப்படையில், நீதிமன்ற அறையில் விசாரணை நடத்தக் கோரிய மனு மற்றும் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகிய இரண்டையுமே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    தொடர்புடைய செய்திகள்

    #supremeCourt #tamilNadu #megadattuDam #legalNews #mekedatuDamIssue #tnGovernment #மேகதாது அணை #சுப்ரீம் கோர்ட் #தமிழ்நாடு அரசு