ஈரான்-அமெரிக்கா இடையே நடந்த போர் ஏப்ரல் 17, 2026 அன்று முடிவுக்கு வந்தாலும், யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான பனிப்போர் தொடர்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச நாடுகளிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டதாகக் கூறியதை ஈரான் அரசும் அதன் அணுசக்தி அமைப்புகளும் மறுத்துள்ளன. பொருளாதாரத் தடைகள் முழுமையாக நீக்கப்படாமல் எந்த யுரேனியத்தையும் வெளியேற்ற மாட்டோம் என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
டிரம்ப் கூற்றும் ஈரான் மறுப்பும்
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 17 அன்று, “ஈரான் இறுதியாக வழிக்கு வந்துள்ளது. அவர்கள் வசம் உள்ள அனைத்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும் சர்வதேச நாடுகளிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டுள்ளனர்” என்று பதிவிட்டார். மேலும் ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை விரைவில் ஒப்படைத்து விடும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தக் கூற்றுகளை ஈரான் அரசு கடுமையாக மறுத்துள்ளது. “எங்கள் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளும் முழுமையாக நீக்கப்படாமல், ஒரு கிராம் யுரேனியத்தைக் கூட நாங்கள் வெளியேற்ற மாட்டோம்” என்று ஈரான் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. யுரேனியம் செறிவூட்டல் ஈரானின் இறையாண்மை சார்ந்த உரிமை என்றும், அழுத்தங்களுக்குப் பணிந்து அணுசக்தித் திட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
வரலாற்றுப் பின்னணி: அமெரிக்க உதவியில் தொடக்கம்
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் யுரேனியம் செறிவூட்டலின் வரலாறு பல தசாப்த கால அரசியல் மாற்றங்களையும், சர்வதேச மோதல்களையும் கொண்டது. பனிப்போர் காலத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனோவர் Atoms for Peace என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா ஈரானுடன் 1957-ஆம் ஆண்டு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1967-ல் அமெரிக்கா, ஈரானுக்கு ஒரு சிறிய அணு ஆராய்ச்சி உலையையும், அதற்கான எரிபொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும் வழங்கியது. பல ஈரானிய விஞ்ஞானிகளுக்கு அமெரிக்காவில் அணுசக்தித் துறையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அணுசக்திப் பயணத்தின் மாற்றங்கள்
1970 ஆம் ஆண்டு ஈரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தமான NPT-யில் கையெழுத்திட்டது. 1979ல் ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, ஆயத்துல்லா கமேனி அணுசக்தி திட்டத்தை “மேற்கத்திய செல்வாக்கு” எனக் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
ஈரான்-ஈராக் போரின் போது, மின்சாரத் தேவையை உணர்ந்த ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டத்தைத் தொடங்கியது. மேற்கத்திய நாடுகள் உதவாததால், சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி ஏ.கியூ. கான் ஆகியோரிடமிருந்து மறைமுகமாக ஈரான் விஞ்ஞானிகள் தொழில்நுட்ப உதவிகளையும் பயிற்சிகளையும் பெற்றனர்.
ரகசியம் வெளிப்படுதல் மற்றும் தடைகள்
2002-ஆம் ஆண்டு ஈரானில் எதிர்க்கட்சியாக இருந்த தேசிய தற்காப்பு கவுன்சில் கட்சி, நடான்சில் ரகசிய யுரேனியம் செறிவூட்டல் மையமும், அராக்கில் கனநீர் உலையும் இருப்பதை உலகிற்கு அம்பலப்படுத்தியது. இது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒப்பந்தத்தை மீறி செறிவூட்டல் பணியை மேற்கொண்டதால், ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்த தடைகளை பொறுட்படுத்தாமல், ஈரான் தனது செறிவூட்டல் அளவை 20% ஆக உயர்த்தியது.
தற்போதைய நிலை மற்றும் எதிர்காலம்
யுரேனியத்தை பொறுத்தவரை மின்சாரம் தயாரிக்க 3% முதல் 5% செறிவூட்டல் போதுமானது. ஆனால், அணு ஆயுதம் தயாரிக்க 90% செறிவூட்டல் தேவை. ஈரான் தற்போது 60% வரை செறிவூட்டி வைத்துள்ளதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம்சாட்டுகின்றன.
2017-ல் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான அமெரிக்காவின் ஒப்பந்தத்தை “மோசமானது” எனக் கூறி அதிலிருந்து விலகினார். ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தார்.
எத்தனை தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும் தனது நாட்டின் இறையாண்மையின் அடிப்படையில் யுரேனியம் செறிவூட்டுவது தங்களது உரிமை என்றும், அதை எங்கும் மாற்ற முடியாது என்றும் ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஆனால் ஈரான் தனது யுரேனிய செறிவூட்டலை நிறுத்தினால் மட்டுமே ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியாக போர் முடிவுக்கு வந்தபோதும், யுரேனியம் செறிவூட்டுவது தொடர்பான பனிப்போர் தொடர்கிறது. இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பது கடினம் என்பதே பன்னாட்டு நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
