மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள கேர் சிஹெச்எல் பல்நோக்கு மருத்துவமனையில், 48 வயது பெண்ணின் வயிற்றில் இருந்த சுமார் மூன்று கிலோ எடை கொண்ட கட்டி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
கடுமையான வயிற்று வலி மற்றும் அதிகப்படியான ரத்தப்போக்கு உள்ளிட்ட தீவிர உடல் உபாதைகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் கால்பந்து அளவிலான ஒரு பெரிய கட்டி இருப்பதை உறுதி செய்தனர். அதன் எடை சுமார் மூன்று கிலோகிராம் எனத் தெரியவந்தது.
சிக்கலான அறுவை சிகிச்சை
நோயாளிக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு, அறுவை சிகிச்சை மூலம் அந்தக்கட்டி பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சிகிச்சை சாதாரணமானது அல்ல என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து கேர் சிஹெச்எல் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் மனோரஞ்சன் பர்ன்வால் கூறுகையில், “இந்த நோயாளி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே மூளை பாதிப்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே நரம்பியல் சிக்கல்கள் இருந்த காரணத்தால், இவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகவும் சிக்கலானதாகவும் இருந்தது” என்று தெரிவித்தார்.
சரியான திட்டமிடல் மற்றும் தீவிர கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சிகிச்சையினால், நோயாளி தற்போது உடல்நலம் தேறி வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

