அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அரசியல் பதற்றங்கள் நீடித்து வரும் சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் இந்தியப் பயணம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. நான்கு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ரூபியோ, ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலைப் பார்வையிட்டார்.
தனது மனைவியுடன் தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்த்த மார்கோ ரூபியோ, அந்த நினைவுச் சின்னத்தின் முன் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம் இதனைத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு விமர்சித்துள்ளது.
வரலாற்று அறிவு குறித்த விமர்சனம்
ஈரான் தூதரகத்தின் பதிவில், “அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவிற்கு உலக வரலாறு அல்லது கட்டடக்கலை குறித்த சரியான அறிவு இருந்திருந்தால், அவர் இந்த இடத்திற்கு வந்து புகைப்படம் எடுக்கத் துணிந்திருக்க மாட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாஜ்மகாலின் பின்னணியில் உள்ள பெர்சியத் தொடர்புகளைச் சுட்டிக்காட்டியே ஈரான் தூதரகம் இந்த கிண்டலான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
கலை மற்றும் அரசியலில் முரண்பாடு
அமெரிக்க அரசு ஈரான் நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருவதுடன், அந்நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இத்தகைய சூழலில், பெர்சியக் கட்டடக்கலை மற்றும் கலாச்சாரத்தின் உச்சமாகக் கருதப்படும் தாஜ்மஹாலை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரசிப்பது ஒரு அரசியல் முரண்பாடு என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முகலாயப் பேரரசர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாகக் கட்டிய இந்த நினைவுச் சின்னத்தில் ஈரானியக் கட்டடக்கலை நுணுக்கங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, அதன் பிரம்மாண்டமான குவிமாடங்கள், சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள நுணுக்கமான இஸ்லாமியக் கையெழுத்துக் கலைகள் மற்றும் பாரம்பரிய ‘சார்பாக்’ தோட்ட வடிவமைப்பு ஆகியவை பெர்சியக் கலை வடிவங்களில் இருந்து ஈர்க்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

