இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு அழைப்பை ஏற்று, சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இது என்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸுடன் சைப்ரஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் முக்கியத் தொழில்முனைவோர்களும் இந்தியா வருகை தந்துள்ளனர்.
மும்பையில் தொடங்கும் பயண நிகழ்வுகள்
மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்த அதிபருக்கு இந்திய அரசாங்கம் சார்பில் முறையான வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் தொடக்கமாக, மும்பை தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுச் சின்னத்திற்கு அவர் மலர் வளையங்களைச் சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தினார். அந்தத் தாக்குதலில் சைப்ரஸ் நாட்டின் குடிமகனும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நாளை மும்பையில் நடைபெறவுள்ள இந்தியா – சைப்ரஸ் வர்த்தக மாநாட்டில் அதிபர் பங்கேற்கிறார். மேலும், மும்பை பங்குச் சந்தையின் வர்த்தக நிறைவு மணியை ஒலித்த பிறகு, அவர் தலைநகர் டெல்லியை நோக்கிப் புறப்படுகிறார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை
நாளை மறுநாள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நிகழ்த்த உள்ளார். இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி அவருக்கு வழங்கும் சிறப்பு மதிய விருந்தில் பங்கேற்கிறார். பின்னர், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்துப் பேசும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. அதிபர் மாளிகையில் அவருக்காக சிறப்பு இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் பொருளாதாரக் ஒத்துழைப்பு
இந்த அரசுமுறைப் பயணத்தின் போது பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடுகள், கல்வி மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் குறித்து இரு நாடுகளும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI), நிதித் தொழில்நுட்பம் (Fintech) மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளையும் இணைக்கும் நேரடி விமானச் சேவையைத் தொடங்குவது குறித்தும் இந்த மாநாட்டில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
வரலாற்றுப் பின்னணியும் கூட்டுத் திட்டமும்
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியப் பிரதமர்கள் யாரும் சைப்ரஸ் நாட்டிற்குச் செல்லாத நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணமானது இரு நாட்டு உறவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்தப் பயணத்தின் போதுதான், அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அதே பயணத்தின் போது, 2025 முதல் 2029 வரையிலான ஐந்து ஆண்டுகால “கூட்டுத் திட்டத்திற்கு” இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாகவே தற்போது சைப்ரஸ் அதிபரின் இந்தப் பயணம் அமணதுள்ளது.
