தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக விளங்கும் முக்கிய சாலைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாநில அரசு எடுத்துள்ள இந்த முடிவும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெயர் சூட்டல் நிகழ்வும் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளன.
ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்தச் சாலையில் மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் அமேசான் போன்ற உலகின் முன்னணி அமெரிக்க மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதிலும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதிலும் தெலுங்கானா அரசு காட்டும் ஆர்வத்தின் வெளிப்பாடாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
தூதர் செர்ஜியொ கொர் பங்கேற்பு
நேற்று நடைபெற்ற அதிகாரப்பூர்வ பெயர் சூட்டல் நிகழ்வில், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியொ கொர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்பித்தார். இந்த நிகழ்வு இரு நாடுகளின் பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு, வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதற்காக இத்தகைய அடையாளங்களை உருவாக்குகிறது.
டொனால்டு டிரம்ப் வெளியிட்ட நன்றி பதிவு
தன்னுடைய பெயரில் சாலை வாங்கப்பட்டுள்ள செய்திய அறிந்த டொனால்டு டிரம்ப், இது குறித்து தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள சாலைக்கு டொனால்டு டிரம்ப் சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இத்தகைய பெருமையைப் பெறும் முதல் அமெரிக்க ஜனாதிபதி என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இந்த கௌரவத்தை வழங்கிய ஐதராபாத் நகரத்திற்கும் தெலுங்கானா அரசுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தூதரக உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, தெலுங்கானாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால், இந்த பெயர் மாற்றம் ஒரு அடையாளப்பூர்வமான அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

