Tag: Cyber Fraud

  • பெங்களூருவில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: 22 கோடி ரூபாய் பறித்த கும்பலை காவல்துறையினர் கைது

    பெங்களூருவில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: 22 கோடி ரூபாய் பறித்த கும்பலை காவல்துறையினர் கைது

    பெங்களூரு நகரில் வசிக்கும் மூதாட்டி ஒருவரை ஐந்து மாத காலத்திற்கு டிஜிட்டல் அரெஸ்ட் செய்து, அவரை மிரட்டி சுமார் 22 கோடி ரூபாயை மோசடி செய்த கும்பலை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசடி

    பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமி ராமமூர்த்தி என்ற பெண், சமீபத்தில் தனது நிலத்தை விற்று பெருந்தொகையை ஈட்டியிருந்தார். இந்தத் தகவல் மோசடியாளர்களின் கவனத்திற்குச் சென்றது. இதனைத் தொடர்ந்து, தங்களை அரசு விசாரணை அமைப்பு அதிகாரிகள் என்று கூறிக்கொண்ட மோசடியாளர்கள், லட்சுமியை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டனர்.

    அவரது பெயரில் சட்டப் பிரச்சனைகள் இருப்பதாகக் கூறி, அவரை மனரீதியாக மிரட்டிய அவர்கள், அவரை டிஜிட்டல் முறையில் வீட்டிற்குள்ளேயே முடக்கினர். கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் வரை, பல்வேறு கட்டங்களில் அவரை மிரட்டி, அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு லட்சுமி ராமமூர்த்தி ரூ.22 கோடிக்கும் மேல் பணத்தை அனுப்பியுள்ளார்.

    வங்கி மேலாளரின் விழிப்புணர்வால் அம்பலம்

    பணத்தை முழுமையாகக் சுரண்டிய மோசடியாளர்கள், மேலும் கூடுதல் பணம் கேட்டதையடுத்து, லட்சுமி ராமமூர்த்தி தனது நகைகளை அடகு வைக்க ஐசிஐசிஐ வங்கிக்குச் சென்றார். அப்போது 1.3 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அடகு வைக்க முயன்ற அவரது செயல்பாடுகளிலும், அவர் அளித்த பதில்களிலும் வங்கி மேலாளருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

    உடனடியாக இந்த விபரத்தை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்குத் தெரிவித்தார் மேலாளர். காவல்துறையினர் லட்சுமியிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது குழந்தைகளை வெளிநாட்டில் இருப்பதாகக் கூறி மறைக்க முயன்றார். ஆனால், விரிவான விசாரணையில் அவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி பெரும் தொகையை இழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

    கைது நடவடிக்கைகள் மற்றும் மீட்பு

    இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கவுரவ் குமார் மற்றும் ஓம்பிரகாஷ் ராஜ்புத் உள்ளிட்ட ஐந்து நபர்களைக் கைது செய்தனர். கைதானவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த 60 லட்ச ரூபாயை காவல்துறையினர் முடக்கினர்.

    மேலும், பணப் பரிமாற்றத்திற்காக மோசடியாளர்கள் பயன்படுத்திய 22 வெவ்வேறு வங்கிக் கணக்குகளைக் கண்டறிந்து, அதன் உரிமையாளர்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்புடைய செய்திகள்

    #crimeNews #bengaluru #cyberFraud #digitalArrest #5 மாதம் டிஜிட்டல் அரெஸ்ட் #பெங்களூரு பெண்ணிடம் ரூ.22 கோடி பறித்த கும்பல் கைது #டிஜிட்டல் அரெஸ்ட் #பெங்களூரு #பெண் #கைது