கர்நாடக மாநில அரசியலில் பெரும் மாற்றங்களுடன், சித்தராமையா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டி.கே.சிவக்குமார் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். மாநிலத்தின் அரசியல் சூழலைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும் இவர், காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய தளபதியாகக் கருதப்படுகிறார்.
ஆரம்பகால வாழ்க்கையும் அரசியல் நுழைவும்
தொட்டலஹள்ளி கெம்பேகவுடா சிவக்குமார் என்று அழைக்கப்படும் டி.கே.சிவக்குமார், கர்நாடகாவின் தொட்டலஹள்ளி என்ற சிறிய கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். மாநில அரசியலில் செல்வாக்கு மிக்க வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த இவர், தனது கல்லூரி நாட்களிலேயே இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து, அரசியலில் தனது முதல் படியை எடுத்து வைத்தார்.
தனது 27வது வயதில், அப்போதைய அரசியல் ஆளுமை தேவகவுடாவை எதிர்த்து சதனூர் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரு ஜாம்பவானை நேரடியாக எதிர்த்த அவரது துணிச்சல், காங்கிரஸ் கட்சியின் மேலிட கவனத்தை ஈர்த்தது.
சட்டமன்றப் பயணமும் செல்வாக்கும்
தொடர்ந்து சதனூர் சட்டமன்றத் தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்ற அவர், பின்னர் கனகபுரா தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று, மாநிலத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்தார். கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் நேரங்களில் தனது நிர்வாகத் திறமையாலும், திட்டமிடலாலும் தீர்வுகளைக் காண்பதால், அவர் கட்சியின் ‘ஆபத்பாந்தவன்’ என்று அழைக்கப்படுகிறார். குறிப்பாக, 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு இவருடைய உத்திகள் மிக முக்கியக் காரணமாக அமைந்தன.
சவால்களும் சட்டப் போராட்டங்களும்
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் விசுவாசமாகத் தொடரும் சிவக்குமார், பலமுறை அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார். 2017ஆம் ஆண்டு குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர்களை ரிசார்ட்டில் பாதுகாத்த விவகாரத்தில், வருமான வரித்துறை அவரது 60 இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் 50 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். நில அபகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிமீறல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டாலும், அரசியல் களத்தில் தனது செல்வாக்கை அவர் தக்கவைத்துக்கொண்டார். 2023ஆம் ஆண்டு தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனக்கு 1,414 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது முதலமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ள டி.கே.சிவக்குமார், நிர்வாகத் திறமையாளராகவும், கட்சியின் நிதி மேலாண்மை நிபுணராகவும் அறியப்படுகிறார். அவரது தலைமையில் கர்நாடக அரசு மேற்கொள்ளும் புதிய திட்டங்கள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் குறித்து அரசியல் வட்டாரங்கள் உற்று நோக்குகிறது.





