குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், வங்கி பெட்டகத்தில் இருந்த ரூ. 8.70 கோடியை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஊழியரை காவல்துறையினர் கைது செய்து, அவர் வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பெட்டகக் காப்பாளரின் முறைகேடு
அகமதாபாத் பேங்க் ஆப் பரோடா வங்கியில் ஹர்ஷத் கடியார் என்பவர் பெட்டக இணை காப்பாளராகப் பணியாற்றி வந்தார். ரிசர்வ் வங்கியிலிருந்து பெறப்பட்டு, பிற வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய பெரும் தொகை இந்தப் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 13-ஆம் தேதி, வங்கி கழிவுகளை அகற்றுவதாகக் கூறி, பெட்டகத்தில் இருந்த ரூ. 8.70 கோடி பணத்தை கட்டுகட்டுகளாக ஹர்ஷத் கடியார் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
\nவிசாரணையில் வெளிப்பட்ட உண்மை
சம்பவத்தன்று வெள்ளிக்கிழமை, மற்றொரு வங்கியின் அதிகாரிகள் ரிசர்வ் வங்கியின் பணத்தைப் பெறுவதற்காக இந்தப் பிரிவுக்கு வந்தனர். அப்போது வங்கி பெட்டகத்தைச் சரிபார்த்தபோது, ரூ. 8.70 கோடி பணம் மாயமானது கண்டறியப்பட்டது. இதுகுறித்து வங்கி மேலாளர் உடனடியாகக் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வங்கியின் உள் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்பு ஆவணங்களை ஆய்வு செய்தனர். விசாரணையின்போது, பெட்டக இணை காப்பாளரான ஹர்ஷத் கடியாரே இந்த மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவரை உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
சொத்துகளும் முதலீடுகளும் பறிமுதல்
விசாரணையில், திருடப்பட்ட பணத்தைக் கொண்டு ஹர்ஷத் கடியார் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்ததும், பல்வேறு முதலீடுகளைச் செய்ததும் தெரியவந்தது. குறிப்பாக, ரூ. 2 கோடி மதிப்பிலான பங்களா, ரூ. 1.40 கோடி மதிப்பிலான நிலங்கள் மற்றும் சொத்துகள், விலை உயர்ந்த கார் ஆகியவற்றை அவர் வாங்கியுள்ளார்.
மேலும், கிரிப்டோகரன்சி மற்றும் பங்குச் சந்தை வர்த்தகங்களில் கணிசமான தொகையை அவர் முதலீடு செய்திருந்தது தெரியவந்துள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக, மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ. 2.20 கோடியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மீதமுள்ள பணத்தின் விவரங்கள் மற்றும் அவை எங்கு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




