தமிழ்நாடு இதுவரை சந்தித்த தேர்தல் களத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல் களம் வித்தியாசமாக அமைந்தது. தேர்தல் களத்தில் விஜய்யின் பிரவேசம் கள நிலவரத்தையே மாற்றியது. அவரது வருகை எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு தேர்தல் பிரசாரம் தொடங்கிய போதே ஏற்பட்டது.
விஜய் அரசியலுக்கு புதிது… தேர்தலுக்கு புதிது… கட்சிக்கு கட்டமைப்பு எதுவும் இல்லை. இந்த சூழ்நிலையில் களத்தில் ஜாம்பவான்களாக இருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளை த.வெ.க. எப்படி எதிர்கொள்ள போகிறது? என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டது.
புதிய அரசியல் பரிமாணம்
நடிகரை பார்த்து கூட்டம் கூடும். அது வாக்குகளாக மாறுமா? என்ற விவாதமும் எழுந்தது. இந்த பரபரப்பான நகர்வுகளின் நிறைவில் வாக்குப்பதிவு நாளும் வந்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை எல்லா தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் திரும்பி பார்க்கும் வகையில் விசிலுக்கு வாக்குகள் அதிக அளவில் விழுந்து இருக்குமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நிகழ்ந்த சம்பவங்கள்தான். பல தேர்தல்களை சந்தித்த முன்னணி கட்சிகள் கூட விசிலுக்கு விழுந்த வாக்குகளை பார்த்து ஆச்சரியப்பட்டன.
234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டது த.வெ.க. அந்த கட்சியை பொறுத்தவரை எல்லோருக்கும் தெரிந்த முகம் விஜய் என்ற ஒரே முகம்தான். அதை தாண்டி எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் நிற்கிறார் என்பது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்ல வாக்களித்தவர்களும் தங்கள் வேட்பாளர் யார்? என்று கூட தெரியாமல்தான் பெரும்பாலும் ‘விசில்’ சின்னத்தை பார்த்து வாக்களித்தார்கள் என்பதுதான் கள நிலவரம்.
இருந்தாலும் இந்த வாக்குகள் வெற்றிக்கு வழிவகுக்காது. புதிய கட்சி, புதிய எதிர்பார்ப்புடன் இளைய தலைமுறையினர் வாக்களித்து இருக்கிறார்கள் அவ்வளவுதான் என்று களத்தில் நின்றவர்கள் தங்களுக்கு தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.
கருத்துக்கணிப்புகளும் எதிர்பார்ப்புகளும்
ஆனாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மாற்றி யோசிக்க வைத்தது. அதிக அளவில் இளைய தலைமுறையினர் வாக்களித்து இருந்ததும் புதிய கட்சியின் வரவை பலர் எதிர்பார்த்ததும் நிச்சயம் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
கருத்துக்கணிப்பில் முன்னணி நிறுவனங்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணிகளுக்குதான் வெற்றி சாதகமாக இருக்கும் என்று கணித்தன. ஒரே ஒரு நிறுவனம் மட்டும் த.வெ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கணித்தன.
தேர்தல் முடிவு வரும் முன்னே தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளுமே ஆட்சியை பிடிக்கப்போவது தாங்கள்தான் என்ற நினைப்பில் அதற்கான முன்தயாரிப்பு வேலைகளிலும் இறங்கி விட்டார்கள்.
வாக்கு எண்ணிக்கையில் திருப்பம்
அரியணை யாருக்கு? என்று முடிவு செய்யும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே எதிர்பாராத திருப்பங்களுடன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அமைந்தது. ஒவ்வொரு சுற்றிலும் எந்த கட்சி முன்னிலை என்று ஒட்டுமொத்த தமிழகமும் ஆர்வமுடன் பார்த்து கொண்டு இருந்த நேரத்தில் விசிலின் சத்தம் பெரும்பாலான தொகுதிகளில் கேட்டது.
தேர்தல் முடிவுகளை அது தெறிக்க விட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தடுமாற தொடங்கினார்கள். பல தேர்தல்களை சாதித்து அனுபவம் பெற்ற அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்களும் கூட விசிலின் தாக்கத்தால் தோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அந்த தொகுதிகளில் விசிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
காலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் கேட்க தொடங்கிய விசில் சத்தம் நேரம் செல்ல செல்ல குறையாமல் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருந்தது. இதனால் அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் கணிசமான தொகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கியது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை 3-வது அணி அல்லது 3-வது கட்சி ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. ஆட்சியை நிர்ணயம் செய்ததாகவும் வரலாறு இல்லை. அந்த வரலாறுகளை முறியடித்து த.வெ.க. புதிய வரலாறு படைத்துள்ளது.
தமிழக அரசியல் வரலாறு மாற்றம்
பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி 1967-ல் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் இதுவரை மாறி, மாறி ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி வந்துள்ளன.
1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய 6 தேர்தல்களில் தி.மு.க. வென்றது. 1977, 1980, 1984, 1991, 2001, 2011, 2016 ஆகிய 7 தேர்தல்களில் அ.தி.மு.க. மகுடம் சூடியது. இந்த 2 கட்சிகளையும் தாண்டி வேறு எந்த கட்சியாலும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இந்த இருக்கட்சிகளுமே கூட்டணி பலத்தோடுதான் தேர்தல்களில் வெற்றியும் பெற்றன.
இந்த இருகட்சிகளையும் தாண்டி புதிதாக ஒரு ஆட்சியை கொண்டு வர திட்டமிட்டு தேர்தல் காலங்களில் புதிய கூட்டணிகளையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஆனாலும் அந்த கூட்டணிகளால் சாதிக்க முடியவில்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுகட்டிய 1967-ல் தேர்தலில் தி.மு.க., சுதந்திரா கட்சி, இடதுசாரிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றன. 1971-ல் தி.மு.க. இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வெற்றி கண்டன. 1977-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வெற்றி கண்டார். அதன் பிறகு தொடர்ந்து 3 முறை எம்.ஜி.ஆர். வென்றார். ஆனாலும் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் மாறி, மாறி கூட்டணி அமைத்தே தேர்தல்களில் வெற்றி கண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டு இருந்தபோது தி.மு.க. இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றது.
1991-ல் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதும் அ.தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றன. 1996-ல் தி.மு.க. மூப்பனார் தலைமையிலான த.மா.கா.வுடன் கூட்டணி அமைத்து வென்றது. 2001-ல் அ.தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றன. 2006-ல் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. 2011-ல் அ.தி.மு.க., தே.மு.தி.க., இடதுசாரிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அப்போது 2ஜி ஊழல் விவகாரம், தி.மு.க.வுக்கு எதிரான அலையால் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது.
2016 தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. முதல்முறையாக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி 32 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அ.தி.மு.க. தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்து வென்றன.
விஜய் சாதனையும் எதிர்காலமும்
தமிழக அரசியல் வரலாற்றில் இந்த தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய அரசியல் புரட்சியாகவே பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது அவருக்கு ஏற்கனவே தி.மு.க.வில் இருந்த அரசியல் அனுபவம் மற்றும் அவருடன் இணைந்த நாஞ்சில் மனோகரன், ஆர்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், காளிமுத்து, திருநாவுக்கரசர், கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், பொன்னையன், ஹண்டே போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களின் பக்க பலமும் இருந்தது.
ஆனால் விஜய்க்கு எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லை. அனுபவம் மிக்க தலைவர்களின் பக்க பலமும் இல்லை. ஆனாலும் தேர்தலில் விஜய் என்ற தனிமனிதர் தனித்துவமான வெற்றியை பெற்று சாதித்துள்ளார். அவர் தேர்தல் பிரசாரம் மூலம் இளைய தலைமுறையினரை ஈர்த்து, மாற்றத்திற்கான விருப்பத்தை வாக்குகளாக மாற்றினார்.
இந்த வெற்றி தமிழக அரசியலில் புதிய போக்கை உருவாக்கியுள்ளது. விஜய் தலைமையிலான த.வெ.க. அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டை எப்படி வழிநடத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.









