நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதியின் திருமண நாளை முன்னிட்டு, ‘அமர்க்களம்’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு இயக்குநர் சரண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
படப்பிடிப்பில் நடந்த சுவாரசியம்
“இந்தப் படத்தை துவங்கி தியேட்டரில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பக்கம் ஷாலினி மேடம், இன்னொரு பக்கம் அஜித் சார் நின்று கொண்டிருந்தார்கள். அதுதான் படத்தின் முதல் ஷெட்யூல்” என சரண் தெரிவித்தார்.
“அஜித் சார் முதலில் எனக்கு விட்டுவிட்டுத்தான் தேதிகள் தருவதாக சொன்னார். ஆனால் இந்த படப்பிடிப்பு துவங்கிய பின்னர், ‘உங்களுக்கு மொத்தமாகவே தேதிகளை தருகிறேன். விரைவாக இந்த படத்தை எடுத்து முடித்துவிடுங்கள். இல்லை என்றால் இந்த பொண்ணை (ஷாலினி) நான் லவ் பண்ணிடுவேனோ என பயமாக இருக்கிறது’ என சொன்னார் அஜித் சார்” என சரண் பகிர்ந்துகொண்டார்.
ப்ரபோசலாக அமைந்த வார்த்தைகள்
“அதைக் கேட்டு வெட்கத்தில் ஷாலினி முகம் சிவந்துபோனது. அது கிட்டத்தட்ட ஒரு ப்ரபோசல்தான். படக்குழு எல்லோரும் ஷூட்டிங் செய்ய தயார் செய்துகொண்டிருந்தார்கள். இந்த ப்ரபோசலை நான் மட்டும்தான் பார்த்தேன்” என சரண் நினைவுகூர்ந்தார்.
“பின்னர் அந்த காதல் உயிர் பெற்றது. மேலும் அஜித் – ஷாலினி இடையே நடந்த காதல் உரையாடல் ஒன்றை அவர்களுக்கே தெரியாமல் ஷூட் செய்து அதனை படத்தின் இரண்டு இடங்களில் பயன்படுத்தினோம்” என்று அவர் மேலும் கூறினார்.
ரசிகர்களுக்கு சவால்
“அது எந்த இடம் என படம் பார்த்து கண்டுபிடியுங்கள். ஆனால் அதை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அஜித் சார் பார்க்கையில் வாசு என்கிற பாத்திரமாக இல்லாமல் அஜித் சாராகவே இருப்பார்” என்று சரண் கூறினார்.
இந்த காதல் கதையை பற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ‘அமர்க்களம்’ படம் 1999 ஆம் ஆண்டு வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.




