கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே இன்று தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 20 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த விபரம்
தேன்கனிக்கோட்டையிலிருந்து புறப்பட்டு கெலமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். ஸ்ரீதர் (28) என்ற ஓட்டுநர் அந்தப் பேருந்தை இயக்கி வந்தார். கெலமங்கலத்திற்கு அருகில் உள்ள உள்ளுக்குறுக்கை பகுதியில் உள்ள அரசு மாணவிகள் தங்கும் விடுதிக்கு முன்பாக பேருந்து சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி பேருந்து சாலையில் கவிழ்ந்தது.
மீட்பு நடவடிக்கைகள்
பேருந்து கவிழ்ந்த வேகத்தில் பயணிகள் பலர் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்ட மீட்புப் படையினர், காயமடைந்த 21 பேரை உடனடியாக ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர் விவரம்
இந்த கோர விபத்தில், ராயக்கோட்டை பாஞ்சாலி நகரைச் சேர்ந்த ராணி (60) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராயக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான காவல்துறை குழுவினர், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
சாலை மதியத்தில் கவிழ்ந்து கிடந்த பேருந்தினால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் பேருந்தை அகற்றி சாலையை சீர் செய்தனர். நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ற நிலையில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து போக்குவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர். விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
