தமிழகமெங்கும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் வாக்காளர்கள், இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மாலை 6 மணி நெருங்கும் வேளையிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதால், டோக்கன் முறை மூலம் இந்த நேர நீட்டிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாலை 5 மணி நிலவரம்
மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், இன்னும் கூடுதல் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 70 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்குப்பதிவு அதிகமாக உள்ள மாவட்டமாக நாமக்கல் 76.43% உள்ளது. வாக்குப்பதிவு குறைவாக உள்ள மாவட்டமாக கன்னியாகுமரி 61.95% உள்ளது. அதிகபட்சமாக, கரூர் மற்றும் நாமக்கல்லில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மதியம் வரையிலான பதிவு
மதியம் 1 மணி நிலவரப்படி, 56.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அதிகபட்சமாக, குமாரபாளையம் தொகுதியில் 67.63 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இம்முறை 17 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகி இருக்கின்றன. 2021-ல் பிற்பகல் ஒரு மணி வரை 39.61% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
காலை 11 மணி வரையிலான நிலவரத்தில், 37.56 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. காலை 9 மணி நிலவரப்படி, 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. பொதுவாக 12 மணி முதல் 3 மணி வரை வாக்குப்பதிவு மந்தமாக இருக்கும் நிலையில், இந்த முறை தொடர் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாக்குப்பதிவு
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நான் எப்படி ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேனோ, அதுபோல தமிழக மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். தமிழ்நாடு வெல்லும்!” என்றார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில், பிரமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் வாக்கு செலுத்தினர். திமுக கூட்டணியில், பிரமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியிலும், விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியிலும் போட்டியிட்டிருக்கிறார்கள்.
காரைக்குடி தொகுதி கண்டனூர் சிட்டாள் ஆச்சி பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம். ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அலுவரிடம் வாக்காளர் ஒருவர் புகாரளித்திருக்கிறார்.
திரைப்பிரபலங்கள் வாக்குப்பதிவு
நடிகர் சூர்யாவும், அவருடைய மனைவி ஜோதிகாவும் சென்னை தி.நகர் தொகுதியில் வாக்கு செலுத்தினர். நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், விக்ரம், துருவ் விக்ரம், அருண் விஜய், கெளதம் கார்த்திக், ஜெய், சசிகுமார், இயக்குநர்கள் அ.வினோத், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து அவரவர் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் த்ரிஷா, அவருடைய தாயாருடன் சென்று வாக்களித்தார்.
சிறப்பு நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள்
திருப்பத்தூரில் திமுகவினருக்கும் தவெகவினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தவெக நகர செயலர் ஷேக் அஸ்லாம் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்பு அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அதுபோல, விசில் சின்னத்திற்கு வாக்களிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட சக்திவேல் என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்திலுள்ள வாக்குச்சாவடி ஒன்றில், வாக்கு இயந்திரத்தை சுயேட்சை வேட்பாளரின் ஏஜெண்ட் ஒருவர் உடைத்திருக்கிறார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பு நிலவுகிறது.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் 4 மணி நேரம் ஆகியும், வாக்களிக்க மக்கள் வரவில்லை. சமீபத்தில் அங்கு நடந்த இரட்டைக் கொலையை கண்டித்து, அக்கிராமத்து மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தகவல்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட குளத்தூர் அருகே உள்ள இளையாவயல் வாக்குச் சாவடியில் 26 திருநங்கைகள் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி உள்ளனர்.
“வாக்காளர்களுக்கு திமுக-வினர் 2000, 4000 என பணம் அளித்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது சட்டத்திற்கு புறம்பானது. இருப்பினும் மக்களிடமிருந்து பறித்தது மக்களிடமே செல்வது ஒரு வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது” என த.வா.க தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
அடுத்த கட்டம்
தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், வாக்கு எண்ணிக்கை வரும் நாட்களில் நடைபெறும். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக இந்த தேர்தல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









