வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் (VB-GRAMG) குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மாநில அரசு எதிர்கொள்ளும் நிதிச் சுமைகளையும், நிர்வாகச் சிக்கல்களையும் சுட்டிக்காட்டி இதில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிதிச்சுமை மற்றும் நிதிப்பகிர்வு கோரிக்கை
இத்திட்டத்தின் கீழ் தற்போது வகுக்கப்பட்டுள்ள நிதிப்பகிர்வு முறை, மாநில அரசுக்கு 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதி வழங்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
கடந்த இரு தசாப்தங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் வேறுபட்ட கட்டமைப்பில் செயல்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் மாநில கருவூலத்திற்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும் என்றும், இதனால் ஊதியங்கள் மற்றும் வேலை நாட்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கு மத்திய அரசு 100 சதவீத நிதியுதவியையும், கட்டுமானப் பொருட்களுக்கான செலவுகளை 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
நிர்வாக அதிகாரப் பகிர்வு
ஒன்றிய அளவிலான ஒரே மாதிரியான கணக்கீடு முறையை நாடு முழுவதும் பின்பற்றுவது, மாநிலங்களின் சமூகப் பொருளாதாரப் பன்முகத்தன்மையை உணராத செயல் என்று முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இது அடிமட்ட அளவில் நிதி ஒதுக்கீட்டில் சமச்சீரற்ற நிலையை உருவாக்கும் என்பதால், உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் நிதிப் பகிர்வுக்கு மாநில அரசுகளுக்கே தனிப்பட்ட வழிமுறைகளை உருவாக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விவசாய கால அட்டவணை மற்றும் நெகிழ்வுத்தன்மை
விவசாயப் பருவங்களின் போது 60 நாட்கள் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கட்டாய விதியினைப் பற்றி குறிப்பிட்ட முதல்வர், எல் நினோ போன்ற கணிக்க முடியாத காலநிலை மாற்றங்களால் விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்கள் அடிக்கடி மாறக்கூடும் என்று விளக்கியுள்ளார். இத்தகைய சூழலில், கால அட்டவணையை முன்னரே அறிவிப்பதற்குப் பதிலாக, மாவட்ட ஆட்சியர்களுக்கே அந்தந்த மாவட்டத்தின் நிலைக்கு ஏற்ப நாட்களை அறிவிக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வீட்டுவசதி திட்ட ஒருங்கிணைப்பு
மத்திய அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களை ஒருங்கிணைக்க அனுமதி இருந்தாலும், மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படும் திட்டங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. ‘அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பயணிப்பதால், மாநில வீட்டுவசதித் திட்டங்களையும் இந்த கட்டமைப்பிற்குள் இணைக்க வேண்டும் என்று அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், திட்டங்களின் ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தைப் பரவலாக்கி மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும் என்றும், மகாத்மா காந்தியின் பெயரிலேயே இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு தேசிய அளவில் முன்னோடியாக உள்ளதால், இந்த மாற்றங்களைக் கொண்டுவந்தால் திட்டத்தின் பயன்கள் கிராமப்புற மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கும் என்று முதல்வர் தனது கடிதத்தில் நிறைவு செய்துள்ளார்.
