Tag: ராணுவ நடவடிக்கைகளை வெளியிட்டதா துரந்தர் 2? குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவு

  • துரந்தர் 2 திரைப்படம் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதா? டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு

    துரந்தர் 2 திரைப்படம் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதா? டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு

    ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரகசிய உத்திகள் திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் ஆகிய அமைப்புகள் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ கடந்த மார்ச் 19 அன்று வெளியானது. தேசப்பற்று மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இத்திரைப்படம் பெரும் கவனத்தைப் பெற்றது.

    பாதுகாப்பு குறித்த கவலை

    ஆயுதமேந்திய எல்லைக் காவல் படையின் தலைமை காவலரான தீபக் குமார், இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், இத்திரைப்படத்தில் இந்திய ஆயுதப் படைகளின் செயல்பாட்டு உத்திகளும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கியமான விபரங்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

    மேலும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்படும் மருந்துகள் தொடர்பான ரகசியங்கள் படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    நீதிமன்றத்தின் கருத்து

    இந்த வழக்கை தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள், நிஜ வாழ்க்கையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகள் மற்றும் மறைந்த ராணுவ வீரர்களின் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக ஒட்டியிருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், “இத்திரைப்படம் ஒரு கற்பனைக் கதையாக இருக்கலாம், இருப்பினும் மனுதாரர் எழுப்பியுள்ள கவலைகளை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது. பொழுதுபோக்கு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டாலும், இது நாட்டு பாதுகாப்பு மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பரிசீலிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

    அதிகாரிகளுக்கு உத்தரவு

    திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, படத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உரிய முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    தொடர்புடைய செய்திகள்

    #சினிமா #நீதிமன்றம் #பாதுகாப்பு #இந்தியா #ராணுவ நடவடிக்கைகளை வெளியிட்டதா துரந்தர் 2? குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவு #dhurandhar2 #indianArmy #militaryOperations #pakistan #ராணுவ நடவடிக்கை