மலேசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு இன்று முதல் தடை விதித்துள்ளது. குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டாய வயது சரிபார்ப்பு நடைமுறை
புதிய விதிமுறைகளின்படி, சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் வயதை உறுதி செய்யக் கட்டாயமான சரிபார்ப்பு முறைகளைச் செயல்படுத்த வேண்டும். இந்த நடைமுறையின் மூலம் 16 வயதிற்குட்பட்டவர்கள் புதிய கணக்குகளைத் தொடங்குவது முற்றிலுமாகத் தடுக்கப்படும்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற 80 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பெரிய தளங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும். அரசின் இந்த உத்தரவை மீறும் நிறுவனங்களுக்கு 24 கோடி ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நாடுகளின் அணுகுமுறை
சிறுவர்களின் மனநலம் மற்றும் இணையப் பாதுகாப்பில் அக்கறை கொண்டு ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. அதே வரிசையில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதளத் தடை விதிப்பது குறித்து தற்போது தீவிரமாகப் பரிசீலனை செய்து வருகின்றன.
மெட்டா நிறுவனத்தின் கவலை
மலேசிய அரசின் இந்த முடிவுக்கு மெட்டா நிறுவனத்தின் கொள்கை இயக்குனர் கிளாரா கோ தனது கருத்துத் தெரிவித்துள்ளார். இது போன்ற முழுமையான தடையானது, பதின்ம வயது இளைஞர்களை முறைப்படுத்தப்படாத மற்றும் பாதுகாப்பற்ற பிற இணையப் பக்கங்களை நோக்கித் தள்ளிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இணையதளங்கள் மூலம் சிறுவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம், தவறான தகவல்களின் தாக்கம் மற்றும் இணையக் குற்றங்களைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கம் என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
