விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் செயல்பாடுகளிலிருந்தும் முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது அரசியல் பயணத்தையும், விலகுவதற்கான காரணங்களையும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
தலைமை மீதான அதிருப்தி
தொடங்கி இருந்த காலங்களில் தலைவர் தொல் திருமாவளவனின் கொள்கைகள் மற்றும் ஆளுமையை பெரிதும் வியந்து அவரைத் தார்மீகத் தலைவராக ஏற்றுக்கொண்டதாகப் பனையூர் பாபு தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியதில் திருமாவளவனின் பங்கு அளப்பரியது என்றும், சாதி மற்றும் மத வெறி சக்திகளைச் சமரசமின்றி எதிர்த்த அவரது உறுதியைத் தான் நம்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தற்போது கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுகள் மற்றும் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு காலத்தில் குறிப்பிட்ட அரசியல் போக்குகளைக் கடுமையாக விமர்சித்த தலைமை, தற்போது அவர்களுடனேயே கைகோர்ப்பது முரண்பாட்டின் உச்சம் என்று அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
அரசியல் பயணம் மற்றும் சாதனைகள்
2007-ஆம் ஆண்டு தொல் திருமாவளவனுக்கு அறிமுகமானதிலிருந்து தனது அரசியல் பயணம் தொடங்கியதாகக் குறிப்பிட்ட அவர், சோழிங்கநல்லூரில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சியில் இணைந்த நிகழ்வை நினைவு கூர்ந்தார். கட்சியின் அங்கீகாரத்துடன் 2009-ஆம் ஆண்டு ‘இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் துணைச் செயலாளர் பொறுப்பை ஏற்ற அவர், பின்னர் கட்சியின் ஊடகப் பணிகளை மேம்படுத்த ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியை நிறுவும் பொறுப்பையும் கவனித்தார்.
சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, செய்யூர் தொகுதியில் மக்கள் பணிகளைத் திறம்பட மேற்கொண்டதுடன், ஆதி திராவிட மக்களின் உரிமைகளுக்காகப் பல முக்கியக் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன்வைத்து அவற்றைச் செயல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலகலுக்கான காரணம்
கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி மாற்றங்களைச் செய்யும் தலைமையின் கீழ் தொடர்ந்து பயணிப்பது தனது மனசாட்சிக்குச் சரிவரவில்லை என்று பனையூர் பாபு தெரிவித்துள்ளார். கவர்ச்சிகரமான அரசியலுக்குப் பின்னால் செல்வது ஆபத்தானது என்று அம்பேத்கர் எச்சரித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது கட்சி அந்தத் திசையிலேயே பயணிப்பதாக அஞ்சியுள்ளார்.
கட்சியிலிருந்து விலகினாலும், அம்பேத்கர், பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களின்படி ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான தனது பயணத்தைத் தொடருவேன் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.




