மக்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்தத் துயரம் நிகழ்ந்தது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் என மொத்தம் 400க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோனது தெரிந்தது. இந்த துயர நிகழ்வு நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இந்த நிலச்சரிவுக்கான ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன.
வயநாடு நிலச்சரிவுக்கான முக்கிய காரணம்
கேரளாவின் வயநாடு நிலச்சரிவுக்கு அரபிக்கடலில் உருவான அதிகப்படியான வெப்ப மண்டலமே காரணம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வை கேரளா தொடுபுழாவில் உள்ள நியூமேன் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பிற முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்தியுள்ளனர். இந்த ஆய்வறிக்கை புகழ்பெற்ற சர்வதேச அறிவியல் இதழான ‘நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ என்ற இதழில் சமீபத்தில் வெளியானது.
பருவமழைக் காலத்தில் அதீத வெப்பம்
அந்த அறிக்கையின் படி பருவமழைக் காலத்திலும் கூட தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறான அதிக வெப்பநிலை கொண்ட ஒரு பகுதி உருவானது. இந்த அதீத கடல் வெப்பத்தால் கடலில் நீர் ஆவியாகும் வேகம் பல மடங்கு அதிகரித்தது. இதனால் வளிமண்டலத்தில் அதிகப்படியான ஈரப்பதம் திரண்டது.
இந்த அதீத ஈரப்பதம் காரணமாக மிக அடர்த்தியான, பிரம்மாண்டமான மேகக்கூட்டம் ஒன்று உருவானது. இது குறுகிய நேரத்தில் குறிப்பிட்ட ஒரு சிறிய பகுதியில் கொட்டித் தீர்க்கும் தன்மை கொண்டது. இந்த மேகக்கூட்டம் நிலப்பகுதிக்குள் நகர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் செங்குத்தான மலைப்பகுதியான வயநாட்டில் மோதியபோது மிகக் குறுகிய காலத்தில் 500 மில்லி மீட்டருக்கும் அதிகமான அதீத கனமழையைக் கொட்டியது.
புவி வெப்பமயமாதலின் தாக்கம்
அரபிக்கடலில் ஏற்படும் இத்தகைய அசாதாரண வெப்ப மாற்றங்கள் புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தையே காட்டுகின்றன. எதிர்காலத்தில் கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இத்தகைய மேகவெடிப்பு போன்ற திடீர் அதிதீவிர கனமழையும், அதனால் ஏற்படும் நிலச்சரிவுகளும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர்.
எச்சரிக்கை மற்றும் எதிர்காலம்
இந்த ஆய்வு முடிவுகள் கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக இத்தகைய இயற்கை பேரழிவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
