தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திரைக்கதை எழுதுவதிலும், இயக்கும் திறமையிலும் தனித்துவம் பெற்ற பாக்யராஜின் மறைவுச் செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகைச் சார்ந்த பல பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சிம்ரனின் இரங்கல் பதிவு
நடிகை சிம்ரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாக்யராஜின் மறைவு மனதிற்கு மிகுந்த வேதனையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “பாக்யராஜ் ஐயா ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட இயக்குநர், சிறந்த கதைசொல்லி மற்றும் மிகச்சிறந்த நடிகர். தனது படைப்புகள் மூலம் சிரிப்பையும், அன்பையும், அர்த்தமுள்ள சமூகச் செய்திகளையும் கொண்டு வந்தவர். தமிழ் சினிமா தனது மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரை இழந்துவிட்டது. இந்த இக்கட்டான நேரத்தில் எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் உள்ளன” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் மற்றும் ஹரிஷ் கல்யாண் பதிவுகள்
நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், சினிமாத்துறைக்கு பாக்யராஜ் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது என்றும், அவரது படைப்புகள் பல தலைமுறையினருக்கு உத்வேகமாக விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது திரையுலகிற்கு ஏற்பட்ட ஒரு பெரும் இழப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது இரங்கல் பதிவில், “பாக்யராஜின் திரைப்படங்களும் எழுத்தும் எங்கள் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரின் அற்புதமான படைப்புகள் மற்றும் மறக்க முடியாத நடிப்புகள் எங்களுக்கு என்றும் வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் திகழும்” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் பாக்யராஜ் தனது எளிய கதைகள் மற்றும் யதார்த்தமான உரையாடல்களால் கிராமிய மணத்திலான திரைப்படங்களை உருவாக்கி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
