Tag: தேரோட்டம்

  • தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    தஞ்சை பெரியகோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரியகோவிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த விழா 15 நாட்கள் நடைபெறும்.

    15 நாள் விழா துவக்கம்

    அதன்படி, இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் பல்லக்கிலும், சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்பட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றன. மேலும் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    தேரோட்டம் கோலாகலம்

    விழாவின் பிரதான நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், ஸ்கந்தர், கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. அதன்பின்னர் தேரில் தியாகராஜர், கமலாம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

    திருமுறைகளை பாடி, சிவ கோஷத்துடன் தாரை தப்பட்டை, நாதஸ்வர இசையுடன் பாரம்பரிய இசை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காகவும், தேரில் வரும் சுவாமிக்கு தேங்காய், பழம் படைப்பதற்காகவும் மேல வீதியில் சந்து மாரியம்மன் கோவில், கொங்கணேஸ்வரர் கோவில், மூலை ஆஞ்சநேயர் கோவில், வடக்கு வீதியில் பிள்ளையார் கோவில், ரத்தினபுரீஸ்வரர் கோவில், குருகுல சஞ்சீவி கோவில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோவில், மணிகர்ணிகேஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், கனரா வங்கி பிள்ளையார் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், காளியம்மன் கோவில் ஆகிய 14 இடங்களில் தேர் நின்று செல்லும்.

    தேர்ப்பாதை மற்றும் நிறுத்தங்கள்

    மேல வீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக நிலையை சென்று சேரும். மாலையில் தேர் மண்டபத்தில் இருந்து தியாகராஜர், கமலாம்பாள் புறப்பட்டு, கோவிலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தேரோட்டத்தை காண திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

    பெரிய கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    #தஞ்சை பெரிய கோவில் #சித்திரை திருவிழா #தேரோட்டம் #தஞ்சாவூர் #பக்தர்கள் #தமிழக விழா #சித்திரை தேரோட்டம் #tanjore #tanjoreBigTemple #chithiraiTherottam

  • சித்திரை திருவிழா: மதுரையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

    சித்திரை திருவிழா: மதுரையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

    மதுரை மாநகரில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் திக்விஜயம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய வைபவங்கள் நாளை முதல் புதன்கிழமை வரை 3 நாட்கள் நடக்கின்றன. இதனையொட்டி, மாநகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சரக்கு வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள்

    மதுரை மாநகர பகுதிகளில், நாளை மினி வேன் போன்ற சரக்கு வாகனங்கள் பகல் நேரத்தில், வழக்கம்போல் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வந்து செல்லலாம். ஆனால், இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் மதியம் 3 மணி வரை நான்கு ஆவணி மூலவீதிகளிலும் எந்த ஒரு சரக்கு வாகனங்களும் வந்து செல்ல அனுமதி இல்லை. இதுபோல மாசி வீதிகளில், கீழமாசி வீதியில் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் எந்த ஒரு சரக்கு வாகனத்திற்கும் வந்து செல்ல அனுமதி இல்லை. மற்ற மாசி வீதிகளில் நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை 2 மணி வரை சரக்கு வாகனங்கள் வந்து செல்லலாம். இது தவிர, நான்கு ஆவணி மூல வீதிகளில் நாளை இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் மதியம் 2 மணி வரை பொதுமக்களின் எந்த ஒரு வாகனமும் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.

    தேரோட்டத்துக்கான வாகன நிறுத்த வழிகாட்டுதல்

    மீனாட்சி அம்மன் தேரோட்டத்தையொட்டி, கோவிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளிலும் நாளை மறுதினம் (செவ்வாய்கிழமை) இரவு 10 மணிமுதல் மறுநாள் தேரோட்டம் முடியும் வரை இரு சக்கர வாகனங்கள் உள்பட எந்த ஒரு வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை. மறுநாள்( புதன்கிழமை) பகல் முழுவதும் கீழமாசி வீதி, கீழமாரட் வீதியில் எந்த ஒரு வாகனங்களும் வந்து செல்ல அனுமதி இல்லை. மற்ற மாசி வீதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

    தேரோட்டத்தைக் காண வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நான்கு மாரட் வீதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்விதமான இடையூறுமின்றி நிறுத்திக்கொள்ளலாம்.

    வாகன நிறுத்த அனுமதி சீட்டு விவரங்கள்

    வாகன நிறுத்தத்தை பொறுத்தமட்டில், நாளை இரவு 11 மணி முதல் ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்லவோ, நிறுத்தம் செய்யவோ அனுமதி கிடையாது. மேலும், வாகனங்களை நாளை மறுநாள் காலை 6 மணி முதல் நிறுத்துவதற்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மஞ்சள் நிற அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள், மேல ஆவணி மூல வீதி பகுதியிலும், இளம் சிவப்பு( ரோஸ்) நிற அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள், வடக்கு ஆவணி மூல வீதி பகுதிகளிலும், நீல நிற அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் தெற்கு ஆவணி மூல வீதி பகுதிகளிலும் தங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும். கீழ ஆவணி மூல வீதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது.

    இதுபோல, திருக்கல்யாணத்திற்கு வருபவர்களில், கார், இருச்சக்கர வாகன அனுமதி சீட்டு இல்லாதவர்கள், தங்களது வாகனங்களை கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு மாசி வீதிகளில் போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் நிறுத்தம் செய்ய வேண்டும்.

    #சித்திரை திருவிழா #மதுரை #போக்குவரத்து #மீனாட்சி அம்மன் #தேரோட்டம் #காவல்துறை #aanmigam #madurai #maduraiChithiraiFestival #trafficChange