சென்னை மணலி புதுநகர், விச்சுர் அருள்முருகன் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
குறிப்பிட்ட சேமிப்பு கிடங்கில் பணியில் இருந்த ஊழியர்கள், திடீரென தீப்பரவியதைக் கண்டவுடன் அலறியடித்துக்கொண்டு விரைவாக வெளியே வந்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், மணலி, எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்களை அனுப்பி மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
தீயணைப்பு வீரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு
கிடங்கிற்குள் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கேன்கள் வெப்பத்தால் வெடித்ததைத் தொடர்ந்து, தீ மிக வேகமாகப் பரவியது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாகக் கிடங்கிற்குள் நுழைய முடியாமல் சிரமப்பட்டனர். பல மீட்டர் உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்த நிலையில், தீயை அணைக்க போராடியபோது கடும் புகை மூட்டத்தால் இரண்டு தீயணைப்பு வீரர்கள் மயக்கமடைந்து சரிந்தனர்.
உடனடியாக மீட்கப்பட்ட அந்த வீரர்கள், முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்டை தொழிற்சாலைக்கு பரவிய தீ
தீ விபத்து ஏற்பட்ட சேமிப்பு கிடங்கிற்கு அருகில் இருந்த மற்றொரு தொழிற்சாலைக்கும் தீ பரவியது. இதனால் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு கூடுதல் சவால்கள் ஏற்பட்டன. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, ரசாயனக் கலவையைப் பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் சேமிப்பு கிடங்கில் இருந்த ஏராளமான எண்ணெய் கேன்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகின. பெரும் பொருள் சேதம் ஏற்பட்டிருந்தாலும், ஊழியர்கள் அனைவரும் சரியான நேரத்தில் வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
விபத்து நடந்த இடத்தில் மணலி புதுநகர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

