இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இதனை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கிடையே, தற்போது எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
ஐ.ஓ.சி நிறுவனம், எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வாடகை வழங்காத நிலையில், இந்த வாடகை பாக்கி ரூ.50 கோடி வரை சென்றுள்ளது. இதனால், வாடகை பாக்கி வழங்காததைக் கண்டித்து, எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) அதிகாரிகள், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், நிலுவைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து லாரி உரிமையாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.
போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். வாடகை வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் எச்சரித்துள்ளார்.
பொதுமக்களுக்கு நிவாரணம்
இந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால், எல்பிஜி சிலிண்டர் விநியோகம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, போராட்டம் காரணமாக பல பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது, மேலும் விலை உயர்வு குறித்த கவலைகள் எழுந்தன. தற்போது சூழ்நிலை சீரடைந்துள்ளதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
