சமூக வலைதளங்களில் தனது தனித்துவமான பேச்சுத்திறணால் பிரபலமான ஜி.பி.முத்து, தனது மகளின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த மகிழ்ச்சியை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.பி.முத்து, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் தனது அன்றாட வாழ்க்கையை வீடியோக்களாகப் பதிவிட்டுப் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். இதன் விளைவாகவே அவருக்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததுடன், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சவால்களுக்கு மத்தியிலும் கிடைத்த வெற்றி
தனது மகளின் மதிப்பெண்கள் குறித்துப் பலரும் சமூக வலைதளங்களில் கேட்டதையடுத்து, அவர் இது குறித்த விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “என் மகள் பத்தாம் வகுப்புத் தேர்வில் 331 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தத் தேர்வு காலக்கட்டத்தில் குடும்பத்தில் பல நெருக்கடிகளும், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சூழல்களும் இருந்ததாகவும், இத்தகைய கடினமான சூழ்நிலையிலும் தனது மகள் விடாமுயற்சியுடன் படித்து இந்த மதிப்பெண்களைப் பெற்றது தனக்கு மிகுந்த பெருமையளிப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துகளைப் பெறும் ஜி.பி.முத்து குடும்பம்
தொடர்ந்து பேசிய அவர், தனது மகள் எதிர்காலத் தேர்வுகளில் இன்னும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்று சிறப்படைவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜி.பி.முத்து வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பல நெட்டிசன்கள் அவரது மகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
