ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வந்த ‘ஜெயிலர் 2’ படத்தை முடித்துவிட்டார். இதன்பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘தலைவர் 173’ படத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படம், சிபி கையில் இருந்து அஷ்வத் மாரிமுத்து கைக்குப் போகும் எனச் சொல்லப்பட்டது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்றாலும், இன்னும் ‘தலைவர் 173’ பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
நடிகர்கள் தேர்வு விவரம்
இப்போது சிபி சக்கரவர்த்தி இப்படத்திற்காக திட்டமிட்டிருக்கும் நடிகர்கள் யார் என தகவல் பரவி வருகிறது. இப்படத்தின் நாயகியாக ஷோபனா அல்லது சிம்ரனை நடிக்க வைக்கலாம் எனவும், கூடவே படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்க கமலிடம் கேட்க இருப்பதாகவும் முடிவு செய்திருக்கிறாராம். மேலும், முக்கியமாக இப்படத்தின் வில்லன் ரோலில் புதிதாக யாரையாவது நடிக்க வைக்கலாம் என யோசித்து, இயக்குநர் ஷங்கரை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டிருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.
நிலவும் குழப்பம்
இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வந்தாலும், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இவை எல்லாம் இந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கினால்தானே தவிர, அஷ்வத் படத்தின் இயக்குநர் என்றால் இவை எல்லாம் மாறும் எனச் சொல்லப்படுகிறது. எனவே, ‘தலைவர் 173’ படத்தின் இறுதி இயக்குநர் யார், நடிகர்கள் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
