தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம், தவெக தலைவர் விஜய் குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி, இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை கோரியுள்ளது. 2026 தேர்தலில் விஜய் ஆதரவாக குழந்தைகளை ஈடுபடுத்தியதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை பயன்படுத்திய பிரச்சாரம்
2026 தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி வீட்டில் உள்ள பெரியவர்களை குழந்தைகள் வலியுறுத்த வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். உங்களுக்கு வீட்டில் ஏதாவது வேண்டும் என்றால், அடம் பிடித்து சாதிப்பதுபோல் விஜய்க்கு வாக்களிக்க அடம் பிடிக்க வேண்டும் எனும் ரீதியில் அவர் பேசியிருந்தார். இதற்கு பல தரப்பிலும் கண்டனம் எழுந்த நிலையில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
தேர்தல் விதிகள் மீறல்
அந்தக் கடிதத்தில், 2023ஆம் ஆண்டே குழந்தைகளை வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என தேர்தல் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன எனவும், ஆனால் விஜய் அந்த விதிகளை மீறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. “குழந்தைகளை பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்குவதை விஜய் நிறுத்த வேண்டும்; Emotional Blackmail Reels, Shorts பகிர்வதை தவிர்க்க வேண்டும்” எனவும் சொல்லப்பட்டுள்ளது.
மன ரீதியான பாதிப்பு
விஜய்யின் பேச்சால் வீட்டில் சண்டைபோட்டு சாப்பிடமாட்டேன் என குழந்தைகள் அடம்பிடிப்பது மற்றும் குழந்தைகளுக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்தில் குழந்தைகளை விஜய் பயன்படுத்தியதும் தவறு எனவும், இது சிறார்களின் உரிமைகளை மீறுவதாகும் எனவும் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நடவடிக்கை கோரிக்கை
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம், விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்களிடம் விஜய் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், தவெக தலைவர் விஜய்க்கும் கண்டன கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
