காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம் வரும் 29-ந்தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் 2018-ம் ஆண்டு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
49 முறை கூட்டம் நடந்தது
இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பிரச்சினைகளை தீர்த்து வருவதாகவும், இதுவரை 49 முறை கூட்டம் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 50-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ளதாகவும், இதில் நான்கு மாநிலங்களின் அதிகாரிகளும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23-ந்தேதி முடிவடைந்துள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெறுகிறது. அதன் பின்னரே புதிய அரசுகள் பதவியேற்கும்.
காபந்து அரசுகள் பதவியில்
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாகவும், காபந்து அரசுகள் மட்டுமே பதவியில் இருப்பதாகவும் மு.வீரபாண்டியன் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுகள் பதவியேற்க உள்ள நிலையில், மாநில அதிகாரிகளை வைத்து இக்கூட்டத்தை நடத்துவது பொருத்தமற்றது என அவர் கூறியுள்ளார்.
கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்
எனவே, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுகள் பதவியேற்றதும் இக்கூட்டத்தை நடத்த வேண்டும் என அவர் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

