புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக்கோரி காங்கிரஸ், தி.மு.க., உட்பட 73 எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட தீர்மான நோட்டீஸ் ராஜ்யசபாவில் அளிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் மீறல் குற்றச்சாட்டு
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தின் முதற்கட்ட தேர்தலுக்கு முன் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனை வலியுறுத்தின. ஆனால் தேர்தல் கமிஷன், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், தொடர்ந்து ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். எனவே, அவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி ராஜ்யசபாவில் காங்., எம்.பி.,க்கள் 27 பேர், தி.மு.க., திரிணமுல் காங்., உட்பட 73 பேர் கையெழுத்திட்ட தீர்மானத்தை காங்., எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திரிணமுல் காங்., எம்.பி., சாகரிகா கோஸ் ஆகியோர் ராஜ்யசபா பொதுச்செயலரிடம் சமர்ப்பித்தனர்.
எதிர்க்கட்சிகளின் மசோதாவில் முக்கிய குற்றச்சாட்டுகள்
எதிர்க்கட்சிகள் அளித்த இந்த தீர்மானத்தில், ‘பிரதமர் மோடியின் செயல்பாடு குறித்து பல்வேறு எதிர்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டின் மீது இதுவரை எந்தவொரு விளக்கமோ அறிவிப்போ அறிவுறுத்தலோ அல்லது அதற்குரிய பதிலையோ தலைமை தேர்தல் கமிஷனர் வெளியிடவில்லை’ என, குறிப்பிட்டுள்ளது.
முந்தைய முயற்சியும் நிராகரிப்பும்
ஏற்கனவே, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தாக்கல் செய்த மசோதாவை முறையே சபாநாயகர் ஓம் பிர்லா, துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிராகரித்தனர். இந்த முறை புதிய நோட்டீஸ் வாயிலாக மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த கட்டம் என்ன?
இந்த நோட்டீஸ் மீது ராஜ்யசபா தலைவர் முடிவு எடுப்பார். எதிர்க்கட்சிகள் இது குறித்து தீவிர விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. தேர்தல் கமிஷன் மீதான நம்பிக்கையும் இந்த விவகாரம் மூலம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
