1975-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம், நாட்டின் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவலில், எண்ணற்ற தேசபக்தர்களின் கனவுகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயக இந்தியாவில், அந்த அவசரநிலை அறிவிப்பு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முடக்கப்பட்ட அடிப்படை உரிமைகள்
சுமார் 21 மாதங்கள் நீடித்த இந்த அவசரநிலைக் காலத்தால், ஜனநாயகத்தின் அடிப்படை நடைமுறைகள் முழுமையாக முடக்கப்பட்டதாக அவர் பதிவிருந்தும்ள்ளார். குறிப்பாக, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதோடு, திட்டமிடப்பட்ட தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதாகவும், சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசு அமைப்புகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசியல் காரணங்களுக்காகப் பல முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என லட்சக்கணக்கான மக்கள் எவ்வித முறையான விசாரணையுமின்றி கைது செய்யப்பட்ட நிகழ்வுகளை அவர் நினைவு கூர்ந்தார்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான உறுதி
அக்காலக்கட்டத்தில் இந்திய அரசியலமைப்பையும், ஜனநாயக விழுமியங்களையும் காக்க உறுதியாக நின்று போராடிய அனைத்து நபர்களுக்கும் இந்நாளில் தனது மரியாதையைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர் எல்.முருகன், ஜனநாயக சுதந்திரங்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இனி ஒருபோதும் நிகழக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

