தமிழகத்தில் மருத்துவ சேவை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், புதிதாகத் தொடங்கப்பட உள்ள 8 ஆயிரம் தனியார் மருத்துவமனைகளுக்கு தற்காலிக அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் தலைமையில், தேனாம்பேட்டை உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் மாநில அளவிலான இணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இணையவழி விண்ணப்ப நடைமுறை
தற்போது உரிமத்திற்காகக் காத்திருக்கும் 8 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள், தேவையான ஆவணங்களையும் தகவல்களையும் இணையதளம் வாயிலாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்தவுடன், அந்த நிறுவனங்களுக்கு உடனடியாகத் தற்காலிக சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகள் நேரில் சென்று முழுமையான ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, நிரந்தர உரிமச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகளில் மாற்றம்
மருத்துவமனைகளின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில், ‘காயகல்ப்’ தரச் சான்றிதழுக்கான ஆய்வுகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை ஆண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த ஆய்வுகள், இனி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முறையாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகளில் பராமரிக்கப்படும் தூய்மை மற்றும் மருத்துவத் தரங்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும்.
பொதுமக்களுக்கான சேவையில் கவனம்
மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களை உரிய மரியாதையுடன் அணுக வேண்டும் என்றும், அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளைத் தடையின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். தரமான மருத்துவச் சேவைகள் சாதாரண மக்களுக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று இக்கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.









