சென்னையில் ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை, சென்னை மாநகரக் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு 7 மணி நேரத்திற்குள் மீட்டனர். கடத்தப்பட்ட குழந்தையுடன் அந்தப் பெண்ணை பள்ளிக்கரணை பகுதியில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கீதா (29) என்பவருக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது முறையாகக் கர்ப்பமாக இருந்த அவர், கடந்த 13-ஆம் தேதி காலை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 15-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீதாவுக்கு, கடந்த நான்கு நாட்களாக ஒரு பெண் அறிமுகமாகி உதவி செய்வது போல நெருங்கி பழகியுள்ளார். கீதாவின் கணவர் தேவராஜ் என்பவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்ததால், கீதா மருத்துவமனையில் குழந்தையுடன் தனியாக இருந்தார்.
நேற்று மதியம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நிலையில், உறவினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி கேட்டு, கீதாவின் கணவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். இதனால் கீதா, குழந்தையுடன் ஆட்டோ பிடித்துத் தனியாக வீடு திரும்பத் திட்டமிட்டு, மருத்துவமனை வாசலில் காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த அந்த அறிமுகப் பெண், “நானும் கொடுங்கையூர் செல்ல வேண்டும், உங்களை வீட்டில் இறக்கிவிட்டுச் செல்கிறேன்” என்று கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய கீதா, அவருடன் மருத்துவமனைக்கு வெளியே உள்ள தேநீர்க் கடை அருகே நடந்து சென்றார். அப்போது ஆட்டோ பிடித்து வருவதாகக் கூறிய அந்தப் பெண், குழந்தையைத் தனது வசம் வாங்கிக்கொண்டு, எதிரே இருந்த பேருந்து நிலையத்திற்குச் சென்றார். சிறிது நேரத்தில் குழந்தையுடன் ஆட்டோவில் ஏறி மாயமான பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை கீதா உணர்ந்தார்.
உடனடியாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த கீதா, தன்னை மேரி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், தனது கணவர் என்று ஒருவரை அறிமுகப்படுத்தி நம்பிக்கையூட்டியதாகத் தெரிவித்தார்.
புகாரைப் பெற்ற போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அந்தப் பெண்ணின் கைபேசி சிக்னல்களைக் கொண்டு தீவிரமாகத் தேடியதில், அவர் பள்ளிக்கரணை பகுதியில் இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை வைத்துப் பிடித்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரியான திட்டமிடலுடன் குழந்தையைக் கடத்திச் சென்ற அந்தப் பெண், எவ்வாறு அணுகினார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
