Tag: அஜ்ஜூர் கிராமம்

  • சேலம்: 100% வாக்குப்பதிவு கொண்ட மலை கிராமம் கொம்பு தூக்கி

    சேலம்: 100% வாக்குப்பதிவு கொண்ட மலை கிராமம் கொம்பு தூக்கி

    தமிழக சட்டசபை தேர்தல் வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற்றது. வரலாறு படைத்த 2026 தேர்தல் தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.69% வாக்குப்பதிவு. தமிழகம் முழுவதும் 4.85 கோடி பேர் வாக்களித்துள்ளனர். 2021 தேர்தலை விட 25 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளது.

    ஏற்காடு தொகுதி தேர்தல் முன்னேற்றம்

    சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு சட்டமன்ற தொகுதி தேர்தலில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக இங்கு ரேவதி மாதேஸ்வரன் (திமுக), உஷாராணி (அஇஅதிமுக), ஜே.லட்சுமி (த.வெ.க), மற்றும் பழனிசாமி (நாதக) ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    சேலம் மாவட்டத்தின் தனி தொகுதியான ஏற்காடு சட்டமன்ற தொகுதி தாலுகாவில் உள்ள 49 வாக்கு சாவடிகளில் நேற்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் ஏற்காடு தாலுகா முழுவதும் 13,980 ஆண் வாக்காளர்களும் , 14,497 பெண் வாக்காளர்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 28478 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    சாதனை படைத்த கொம்பு தூக்கி கிராமம்

    இதில் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் வரும் கொம்பு தூக்கி மலை கிராமத்தில் 301 வாக்குகள் உள்ளது. இந்த 301 வாக்குகளும் பதிவாகி 100 சதவிகிதம் வாக்கு பதிவுகளை பெற்று அசர வைத்த மலை கிராம மக்கள். இதனால் மொத்தமாக ஏற்காடு சட்டமன்ற தாலுக்காவில் 94 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    இந்த சாதனை மலை கிராம மக்களின் விழிப்புணர்வையும், வாக்களிப்பில் அவர்களின் ஆர்வத்தையும் காட்டுகிறது. கடும் மலைப்பாங்கான பகுதியிலும் வாக்குச்சாவடிக்கு வந்து அனைவரும் வாக்களித்தது பாராட்டுக்குரியது.

    தமிழக தேர்தல் புள்ளிவிவரங்கள்

    தமிழகம் முழுவதும் 4.85 கோடி பேர் வாக்களித்துள்ளதுடன், 2021 தேர்தலை விட 25 லட்சம் கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது மக்களிடையே வாக்களிப்பு உணர்வு அதிகரித்திருப்பதை காட்டுகிறது. மாலை 6 மணி நிலவரப்படி 84.69 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

    #சேலம் #ஏற்காடு #தேர்தல் #வாக்குப்பதிவு #தமிழகம் #சாதனை #100 சதவீத வாக்குப்பதிவு #கிராமம் #salem #100%VoterTurnout

  • கொள்ளிடம் அருகே குளத்தில் முதலை அட்டூழியம் – மக்கள் அச்சம்

    கொள்ளிடம் அருகே குளத்தில் முதலை அட்டூழியம் – மக்கள் அச்சம்

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான அய்யனார் குளம் உள்ளது. சுமார் 2 ஏக்கரில் அமைந்துள்ள இந்த குளம் கிராமத்தில் நிலத்தடி நீரை பாதுகாத்து வைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு குடிநீர் மற்றும் குளிப்பதற்காக இந்த குளம் பயன்பட்டு வருகிறது. மேலும் கிராம மக்களும் இந்த குளத்தில் குளித்து வருகின்றனர்.

    முதலையின் நடமாட்டம்

    இந்த குளத்தில் கடந்த ஒரு ஆண்டாக ஒரு முதலை சுற்றித்திரிந்து வருகிறது. குளத்தின் கரை பகுதியில் வரும் ஆடு, கோழிகளை இந்த முதலை வேட்டையாடி வருகிறது. இதுவரை 6 ஆடுகளையும், 20-க்கும் மேற்பட்ட கோழிகளையும் பிடித்து தின்றுள்ளது. இரவு நேரத்தில் முதலை சாலை ஓரம் உள்ள நெட்டகுளத்தில் இறங்கி விடுகிறது. அதிகாலையில் மீண்டும் அய்யனார் குளத்திற்கு வந்து கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு, கோழிகளை பிடித்து தின்று விடுகிறது. இதனால் குளத்தில் குளிப்பதற்கு அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆடு, மாடுகளை குளத்தில் குளிப்பாட்டுவதையும் தவிர்த்து வருகின்றனர்.

    வனத்துறை நடவடிக்கை

    இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சீர்காழி வனத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் தொடர்ந்து முகாமிட்டு முதலையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். ஆனால் அவர்கள் கண்களில் முதலை படவில்லை. இந்த நிலையில் நேற்று அய்யனார் குளத்தின் கரையில் முதலை படுத்திருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி வனத்துறையினர் மீண்டும் முதலையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதலையை பிடித்து அப்புறப்படுத்தினால் தான் இங்கு உள்ளவர்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    #முதலை #கொள்ளிடம் #மயிலாடுதுறை #வனத்துறை #அச்சம் #கிராமம் #mayiladuthurai #kollidam #crocodile

  • வனத்துறை கண்டித்து நீலகிரியில் நோட்டா வாக்களித்த மக்கள்

    வனத்துறை கண்டித்து நீலகிரியில் நோட்டா வாக்களித்த மக்கள்

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஜ்ஜூர் கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட படுகர் சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்து உள்ளதாக கூறி கிராமத்தை காலி செய்யுமாறும், தேயிலை தோட்டத்தில் பச்சை தேயிலை பறிக்கக்கூடாது எனவும் வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், தங்களது கிராமம் வன நிலமாக எப்படி சேர்க்கப்பட்டது? என கேள்வி எழுப்பி வருவதுடன், பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி நீண்ட காலமாக போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    தேர்தல் புறக்கணிப்பு

    இந்தநிலையில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதற்காக அஜ்ஜூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. கிராமத்தை காலி செய்ய நோட்டீஸ் வழங்கிய வனத்துறையை கண்டித்து அஜ்ஜூர் கிராமத்தை சேர்ந்த 818 வாக்காளர்கள் காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 6 மணி நேரம் ஒரு வாக்கு கூட செலுத்தாமல் தேர்தலை புறக்கணித்தனர்.

    பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளித்தால் அனைவரும் வாக்களிக்க உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த வாக்குச்சாவடியில் 941 வாக்காளர்கள் உள்ள நிலையில், அதன் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 14 பேர் மட்டுமே வாக்களித்தனர். அஜ்ஜூர் கிராம மக்கள் ஓட்டு போட வராததால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

    பேச்சுவார்த்தை மற்றும் நோட்டா வாக்கு

    இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர் கிராம மக்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக கூறியதால் அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர். அதன் பின்னர் கிராம மக்கள் நோட்டாவுக்கு ஓட்டு போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    #நீலகிரி #வனத்துறை #நோட்டா வாக்கு #தேர்தல் புறக்கணிப்பு #பட்டா கோரிக்கை #அஜ்ஜூர் #2026 சட்டமன்ற தேர்தல் #அஜ்ஜூர் கிராமம் #நோட்டா #கிராம மக்கள்