சென்னை: சட்டசபை தேர்தலுக்கு ஓட்டளிக்க சொந்த ஊர் சென்ற பயணியர், சென்னைக்கு ஒட்டுமொத்தமாக திரும்பினர். இதனால் விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்து, பலருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
விமான டிக்கெட் விலை ஏற்றம்
சென்னையில் வசிக்கும் பலருக்கு, சொந்த ஊரில் ஓட்டு உள்ளது. இவர்கள், கடந்த 23ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க, சொந்த ஊருக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். ஓட்டுப்பதிவுக்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மற்றும் வார விடுமுறை வந்ததால், பலரும் குடும்பத்தினருடன் சென்றனர்.
ஓட்டுப்பதிவு முடிந்ததும், நேற்று பலரும் ஒட்டுமொத்தமாக சென்னைக்கு புறப்பட்டனர். இதனால் பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதியது. சிலர் விமானங்களில் சென்னை திரும்ப முயன்றபோது அவர்களுக்கு, டிக்கெட் கிடைக்கவில்லை. பெரும்பாலும் ஓரிரு இருக்கைகள் மட்டுமே இருந்தன. அதனால் அவற்றின் விலையும், வழக்கத்தைவிட ‘ராக்கெட்’ வேகத்தில் உயர்ந்தது; பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.
விமான வட்டாரங்கள் விளக்கம்
இது குறித்து விமான வட்டாரங்களிடம் கேட்ட போது, ‘தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில், பலரும் ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டனர். ஓரிரு இருக்கைகள் இருந்த விமானங்களில், ‘டிமாண்ட்’ அடிப்படையில் விலை ஏற்றம் இருந்தது’ என்றனர்.
விமான கட்டண உயர்வு காரணமாக பல பயணிகள் வேறு மாற்று வழிகளை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் நிலைமை சீராகும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

