வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் நோக்கில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 10 முக்கிய இடங்களில் நாளை சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வருங்கால வைப்பு நிதி ஆணையர் நிஷா ஓவி வெளியிட்டுள்ளார்.
‘நிதி ஆப்கே நிகத்’ சிறப்பு முகாம்கள்
‘நிதி ஆப்கே நிகத்’ (உங்கள் அருகில் வைப்பு நிதி) என்ற பெயரில் நடைபெறும் இந்த முகாம்கள், நாளை புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும். சென்னை, வேலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இந்த முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
முகாம்கள் நடைபெறும் இடங்கள்
சென்னையில் தியாகராய நகரில் உள்ள ஹோட்டல் ரெசிடென்சி, அண்ணாநகர் மேற்கில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ கல்வி அறக்கட்டளை ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன. மேலும், கும்மிடிப்பூண்டி சிப் காட் தொழிற்பேட்டையில் உள்ள மிட்சுபா இந்தியா நிறுவனம், காஞ்சிபுரம் பெரியார் நகரில் உள்ள ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம் மற்றும் தாம்பரம் மெப்ஸ் மாநாட்டு அரங்கிலும் இந்த குறைதீர்க்கும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
வழங்கப்படும் சேவைகள்
இந்த முகாம்களில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்கள் முதலாளிகளிடம் இருந்து எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் புகார்களை நேரடியாகத் தெரிவித்து தீர்வு பெறலாம். மேலும், தொழிலாளர்களுக்குத் தேவையான இணையவழி சேவைகள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும். துறை சார்ந்த சீர்திருத்தங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்டன், ஓய்வூதியதாரர்கள் தங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பதிவு செய்யும் முறை
இந்த முகாம்களில் பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள், துறை வழங்கியுள்ள இணையதளப் படிவத்தில் (Google Form) தங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் திட்டமிட்டபடி சேவை வழங்க வசதியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
