தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், நுகர்வோர்களுக்கு மேம்பட்ட மற்றும் விரைவான சேவைகளை வழங்குவதற்காக தனது தாழ்வழுத்த பில்லிங் மென்பொருளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய சேவையகங்கள் மற்றும் தரவுத்தளங்களை நிறுவும் பணிகள் பல கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளன.
பாதிக்கப்படும் மின் பகிர்மான வட்டங்கள்
இந்த மேம்பாட்டு பணிகளால் சென்னையின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன. குறிப்பாக, காஞ்சிபுரம் மண்டலத்திற்குட்பட்ட அடையார் மின்பகிர்மான வட்டத்தின் அடையார், ஐ.டி காரிடார், தாம்பரம், பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் கோட்டங்கள் இதில் அடங்கும்.
அதேபோல், சென்னை தெற்கு மின் பகிர்மான வட்டத்தின் கே.கே.நகர், போரூர், கிண்டி கோட்டங்கள் மற்றும் சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்தின் அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி கோட்டங்களில் உள்ள நுகர்வோரும் இந்த பாதிப்பை எதிர்கொள்வார்கள்.
நிறுத்தப்படும் சேவைகள் மற்றும் கால அவகாசம்
மேற்கூறிய பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்களுக்கான மின் கட்டண வசூல் கவுண்டர்கள் மற்றும் இணையதள சேவைகள், மற்றும் புதிய மின் இணைப்புக்கான விண்ணப்ப சேவைகள் ஆகியவை வரும் 23.05.2026 (சனிக்கிழமை) நள்ளிரவு 00.00 மணி முதல் 24.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 24.00 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மென்பொருள் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்தவுடன், அனைத்து சேவைகளும் மீண்டும் வழக்கம்போல் செயல்படுத்தப்படும் என்று மின் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர் இந்த கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு, தங்களின் கட்டணச் செலுத்தல்கள் மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான பணிகளை முன்கூட்டியே செய்து கொள்மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த தொழில்நுட்ப மேம்பாட்டினால் ஏற்படும் தற்காலிக சிரமத்திற்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
