கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் பாலாஜி பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார். இதன் போது, ராம்நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்ட்களின் மஞ்சள் துண்டு அணிவது தொடர்பான சர்ச்சை ஏற்பட்டது.
மஞ்சள் துண்டு விவகாரம்
கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பல வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த திமுக பூத் ஏஜெண்டுகள் மஞ்சள் நிற துண்டு அணிந்து வந்தனர். சில இடங்களில் இது அனுமதிக்கப்பட்டது, ஆனால் சில இடங்களில் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக ராம்நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளில் பூத் ஏஜெண்ட்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற துண்டை அதிகாரிகள் அகற்ற வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பூத் ஏஜெண்ட்கள், வாக்குப்பதிவை பார்வையிட வந்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் முறையிட்டனர். உடனடியாக அந்த மையத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று பார்த்த செந்தில் பாலாஜி, பூத் ஏஜெண்ட்கள் யாரும் மஞ்சள் நிற துண்டு அணியவில்லை என்பதை கவனித்தார்.
செந்தில் பாலாஜி கேள்வி
இதையடுத்து, “வாக்குச்சாவடிக்குள் கட்சி துண்டுதான் அணியக்கூடாது. ஆனால் பொதுவான மஞ்சள் நிற துண்டு அணிவதில் என்ன தவறு?” என செந்தில் பாலாஜி தேர்தல் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். பூத் ஏஜெண்ட்களை மஞ்சள் நிற துண்டு அணிய அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஈவிஎம் இயந்திர சர்ச்சை
இதேபோல், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈவிஎம்) அகர வரிசைப்படி சரியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். அப்போது 91-வது பூத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அகர வரிசைப்படி இல்லாமல் மாற்றி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தேர்தல் அதிகாரிகளிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரியான வரிசையில் வைக்குமாறு கூறினார். அதிகாரிகளும் உடனடியாக ஈவிஎம் இயந்திரங்களை மாற்றி சரியான வரிசையில் வைத்தனர். இந்த சம்பவங்கள் கோவை தெற்கு தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
