போர் பகுதிகளில் நிலவும் வன்முறைகளின் ஒரு பகுதியாக, பாலஸ்தீனப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இஸ்ரேலிய ராணுவத்தினர் திட்டமிட்ட பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலைத் தனது கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
திட்டமிடப்பட்ட வன்முறைகள் எனப் புகார்கள்
இது குறித்து நெதர்லாந்தைச் சேர்ந்த பெண்களுக்கான சட்ட உதவி மற்றும் ஆலோசன மையத்தின் உறுப்பினர் கிபாயா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருந்த 75 பெண்களை ஆய்வு செய்ததில், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் தனிப்பட்ட நபர்களால் தற்செயலாக நடந்தவை அல்ல; மாறாக, இவை முறையாகத் திட்டமிடப்பட்ட தொடர் செயல்பாடுகள் என்பதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐநா பிரதிநிதியின் கருத்து
ஐநா சபையின் சிறப்புப் பிரதிநிதி ரீம் அல்சலேம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், பாலஸ்தீனப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய பெரிய அளவிலான பாலியல் வன்முறைகள் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இத்தகைய சூழலில், இஸ்ரேலை கருப்புப் பட்டியலில் சேர்த்திருப்பது மிகவும் தாமதமான ஒரு நடவடிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் தூதரின் கடும் எதிர்ப்பு
இருப்பினும், ஐநா சபையின் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் தூதர் டேனி டானோன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்களில், “இஸ்ரேலை கருப்புப் பட்டியலில் சேர்த்ததும், பாலியல் வன்முறையை போர்க்கருவியாகப் பயன்படுத்துவதாகக் கூறுவதும் அப்பட்டமான பொய்கள்” என்று சாடியுள்ளார்.
மேலும், இஸ்ரேலை ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் ஒரே பட்டியலில் வைப்பதை எங்களால் எந்தக் காரணத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேற்கு கரை அறிக்கையின் பின்னணி
கடந்த மாதம் வெளியான மேற்கு கரை பாதுகாப்பு கூட்டமைப்பின் அறிக்கையில், இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினரின் பாலியல் அத்துமீறல்கள் காரணமாகவே பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைப் பகுதிகளிலிருந்து வெளியேறி வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐநா சபையின் சுயாதீன விசாரணையின் முடிவுகளும் இதே போன்ற குற்றச்சாட்டுகளையே உறுதிப்படுத்தியுள்ளன.


