திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலர் ஆரோக்கியசாமி, மதுபான கூடம் ஒன்றில் பா.ஜ. நிர்வாகியை தாக்கிய வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மணப்பாறை போலீசார் இவரை கைது செய்து, உடல் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
நெஞ்சுவலி நாடகம்
அங்கு சென்றதும், ஆரோக்கியசாமி, தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், டாக்டர்கள் பரிசோதனை செய்ய அனுமதிக்காமல் முரண்டு பிடித்துள்ளார். அமைச்சர் நேருவின் ஆதரவாளர் என்பதால், டாக்டர்கள் எதுவும் செய்ய முடியாமல் இருந்தனர்.
மாஜிஸ்திரேட் மிரட்டல்
நேற்று முன்தினம் இரவு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த முசிறி மாஜிஸ்திரேட், டாக்டர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டுள்ளார். டாக்டர்கள், ‘அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. அவர் நெஞ்சுவலி என நடிப்பதாக தெரிகிறது’ என தெரிவித்தனர். இதையடுத்து, ஆரோக்கியசாமியிடம் மாஜிஸ்திரேட், ‘உங்களுக்கு உடல்நலம் சரியிருந்தால் தான், ரிமாண்ட் செய்து பெயில் தர முடியும்’ என கூறியுள்ளார்.
ஆரோக்கியசாமி சரண்
மாஜிஸ்திரேட் இவ்வாறு கூறியதும், அதுவரை நெஞ்சுவலி என்று கூறிய ஆரோக்கியசாமி, ‘நான் நல்லாத்தான் இருக்கேன். லேசா தான் நெஞ்சு வலிக்குது’ என அந்தர்பல்டி அடித்துள்ளார். இதைக்கேட்டு கடுப்பான மாஜிஸ்திரேட், நெஞ்சுவலி நாடகம் என்பதை புரிந்து கொண்டு, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். உடனே, மீண்டும் நெஞ்சுவலி எனக்கூறி, அரசு மருத்துவமனையில் ஆரோக்கியசாமி சிகிச்சை என்ற பெயரில் தொடர்ந்து தங்கி இருக்கிறார்.
