தமிழகத்தில் த.வெ.க அரசாங்கத்தின் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விழாவின் தொடக்க நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தானது மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, மே 10-ஆம் தேதி விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற நிகழ்வின் போது, முதலில் ‘வந்தே மாதரம்’ பாடப்பட்டது, அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாகப் பாடப்பட்டிருந்தது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அப்போது, எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்தார்.
இருப்பினும், தற்போது நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கப் பதவியேற்பு விழாவிலும் இதே போன்ற நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இந்த விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்தானது மீண்டும் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், இது திட்டமிட்டு நடத்தப்படும் செயல் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இது குறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகையிலும் இனிமேல் பின்னுக்குத் தள்ளப்படும் என்பதற்கு இந்த விழாவே சான்றாகும். தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தொடர் அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது கண்டனத்தைத் தொடர்ந்த அவர், “தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதை திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழோடு விளையாடியவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” என்று மிகக் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்துள்ளார்.









