தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது இரண்டு நாள் டெல்லி பயணத்தை நிறைவு செய்து கொண்டு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொண்ட முதல் டெல்லி பயணமாக இது அமைந்தது. நேற்று காலை தனி விமானம் மூலம் தலைநகருக்குச் சென்ற அவருக்கு, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அதிகாரிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், காவல்துறை அணிவகுப்பு மரியாதை அவருக்கு வழங்கப்பட்டது.
மத்திய அரசு பிரதிநிதிகளுடன் சந்திப்பு
தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, முதலமைச்சர் விஜய் நேற்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து முக்கியக் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாக, மாலை 6.30 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார்.
இந்த சந்திப்புகளின் போது, தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு முன்வைக்கும் பல்வேறு நிதி சார்ந்த கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் வலுவாக வலியுறுத்தினார். மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான மத்திய அரசின் ஒத்துழைப்பு குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடந்ததாகத் தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு ரத்து
திட்டமிட்டபடி, இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை முதலமைச்சர் விஜய் சந்திக்க இருந்தது. இதற்காக உரிய நேரம் கோரப்பட்டு, சந்திப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் முதலமைச்சர் விஜய் அவசரமாக சென்னைக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டதையடுத்து, இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
திட்டமிட்ட பயணக் காலத்தை விட முன்னதாகவே அவர் சென்னைக்குத் திரும்புவதால், காங்கிரஸ் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை தள்ளிப்போடப்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னை நோக்கிப் புறப்பட்டுள்ளார்.









