Tag: கோவில் நிதி

  • கோவில் நிதியில் வாகன நிறுத்துமிட வசதிகள்: சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் மற்றும் சேகர்பாபு விவாதம்

    கோவில் நிதியில் வாகன நிறுத்துமிட வசதிகள்: சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் மற்றும் சேகர்பாபு விவாதம்

    அறநிலையத்துறை நிதி பயன்பாடு குறித்து விவாதம்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறநிலையத்துறை நிதியைப் பயன்படுத்திய விதம் குறித்து அரசு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. குறிப்பாக, கோவில்களின் வருமானத்தை பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதை அமைச்சர் ரமேஷ் தெளிவுபடுத்தினார்.

    அறநிலையத்துறை மூலம் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்து பாஜகவின் நிலைப்பாடு என்ன, அதே நிலைப்பாட்டை அரசு பின்பற்றுகிறதா என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ், ஆளுநர் உரையில் குறிப்பிட்டபடி, கோவில் வருமானம் என்பது பக்தர்களின் நலனுக்காகவும், வசதிகளுக்காகவும் மட்டுமே செலவிடப்படும் என்று கூறினார்.

    வாகன நிறுத்துமிட வசதிகள் குறித்த கேள்வி

    கடந்த ஆட்சிக்காலத்தில் கோவில் நிதியைப் பயன்படுத்தி வணிக ரீதியிலான செயல்பாடுகளில் ஈடுபட்டது குறித்து அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார். “கழிவறை வசதிகள் கூட இல்லாத கோவில்களில், 10 கோடி ரூபாய் செலவில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் (Multi-level car parking) அமைப்பது எதனால் தேவைப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், திருமண மண்டபங்கள் போன்ற வணிகப் பயன்பாட்டிற்காக அறநிலையத்துறை நிதி கடந்த ஆட்சியில் பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

    பழநி சித்த மருத்துவமனை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்க முன்வந்திருந்தும், கடந்த ஆட்சி அதனைத் தடுத்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய அரசு யாருடைய நிழலிலும் செயல்பட வேண்டிய அவசியமில்லை என்று அழுத்தமாகக் கூறினார்.

    முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

    அமைச்சர் ரமேஷின் கருத்துக்களுக்குப் பதிலளித்த முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திட்டங்கள் அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். குன்னூரில் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத் திட்டம், நகராட்சிக்கு வருவாயை ஈட்டித் தருவதற்காகக் கொண்டு வரப்பட்ட ஒன்று என்று அவர் விளக்கமளித்தார்.

    இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “குன்னூர் விநாயகர் கோவில் நிலத்தில் வாகன நிறுத்துமிடத்தை அமைத்தாலும், அதற்கான நிதியை கோவில் கணக்கிலிருந்து எடுத்தது ஏன்? பக்தர்கள் கார் பார்க்கிங் செய்ய வேண்டும் என்று கேட்டார்களா? அவர்களுக்குத் தேவை நிம்மதியான தரிசனம் மட்டுமே” என்று சாடினார்.

    இருப்பினும், பெரிய கோவில்களில் வாகன நிறுத்துமிட வசதி என்பது ஒரு அத்தியாவசியத் தேவை என்றும், அதனைத் தேவையில்லை என்று கூற முடியாது என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துத் தெரிவிக்கடன் விவாதம் நிறைவடைந்தது.

    தொடர்புடைய செய்திகள்

    latest

    தமிழ்நாடு சட்டசபை: மின்சாரத்துறை வெள்ளை அறிக்கையை இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அறிவிப்பு

    latest

    மேகதாது திட்டத்திற்குத் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மத்திய அமைச்சர் குமாரசாமி

    latest

    திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவு விபத்து: சட்டப்பேரவையில் அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் விளக்கம்

    #tamilNaduAssembly #hrce #templeFunds #governmentDebate #தமிழக சட்டப்பேரவை கூட்டம் #முன்னாள் அமைச்சர் சேகர் பாபு #அமைச்சர் ரமேஷ் #கார் பார்க்கிங் #கோவில் நிதி #tnAssembly