தமிழகத்தில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், மதிப்பெண்கள் வழங்குவதில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தகுதித் தேர்வின் மதிப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நடக்கும் ஊழல்களும் முறைகேடுகளும் குறையவில்லை என்பதே உண்மை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மதிப்பெண் வழங்கலில் முரண்பாடுகள்
தேர்வின் மதிப்பீட்டில் நடந்திருப்பதாகக் கூறப்படும் சில குறிப்பிட்ட முறைகேடுகளை நயினார் நாகேந்திரன் தனது பதிவில் பட்டியலிட்டுள்ளார். முதன்மைத் தாளில் 150 மதிப்பெண்களுக்கு 111 மதிப்பெண்கள் பெற்ற ஒரு விண்ணப்பதாரருக்கு, கட்டுரை பகுதியில் 50 மதிப்பெண்களுக்கு வெறும் பூஜ்ஜியம் மதிப்பெண்களே வழங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பணி அனுபவம் மற்றும் மூப்பு அடிப்படையில் முன்னுரிமை பெற வேண்டிய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, ஒற்றை இலக்க மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட முடிவுகளின்படி பணி நியமன ஆணை பெற்ற ஒருவருக்கு, ஆரம்பத்தில் பூஜ்ஜியமாக இருந்த அனுபவ மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு 15 ஆக உயர்ந்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் தீவிரமாகப் பார்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பணியிடங்களை அதிகரிக்கக் கோரிக்கை
அதிகாரிகளின் சுயநலத்திற்காக பட்டதாரிகளின் எதிர்காலம் பாதிப்படுவதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்வு முடிவுகளை அரசு முறையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுடன், மேலும் காலியாக உள்ள 1,292 பணியிடங்களையும் சேர்த்து, மொத்தம் 4,000 காலிப் பணியிடங்களை நிரப்புமாறு முதல்வர் விஜய்யை நயினார் நாகேந்திரன் தனது பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
