தென் அமெரிக்காவில் உள்ள நாடு கொலம்பியா. அங்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தென்மேற்கு கொலம்பியாவில் உள்ள காஜிபியோ பகுதியில் பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்றில் நேற்று பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது.
குண்டுவெடிப்பு விவரம்
பேருந்து பயணித்துக்கொண்டிருந்த போது, அதில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச்செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் உட்பட 38 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் காஜிபியோ பகுதியில் 26க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்கு பின்னணி
ஆயுதக் கும்பல்கள் காவல் நிலையங்கள் மற்றும் ரேடார் மையங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பேருந்து தாக்குதலும் இதன் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
குற்றவாளிகள் யார்?
இந்த பேருந்து தாக்குதலுக்கு நாட்டின் தேடப்படும் மிக முக்கியமான குற்றவாளியான இவான் மோர்டிஸ்கோவின் கும்பல் மற்றும் ஜெய்ம் மார்டினெஸ் கும்பல் தான் காரணம் என கொலம்பிய ராணுவ தளபதி ஜெனரல் ஹியூகோ லோபஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆயுதக் கும்பல்கள் பல ஆண்டுகளாக கொலம்பியாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அதிபர் கண்டனம்
கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெட்ரோ இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை ஒழிக்க தனது அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கொலம்பியாவில் போதைப்பொருள் கும்பல்களுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இந்த சம்பவம் நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
