நெட்பிளிக்ஸ் ஓடிடியில் புதிதாக வெளியான ஆங்கில படமான ‘அபெக்ஸ்’ குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் பாராட்டியுள்ளார்.
வைரமுத்துவின் விமர்சனம்
அவரது பதிவில், “ஓர் ஆங்கிலப் படம் பார்த்தேன் ‘Apex’. கதை என்னவோ சிறியதுதான்; களம் பெரிது; காட்சி பெரிதினும் பெரிது” என்று தொடங்கியுள்ளார்.
அவள் ஒரு மலையேறி, எட்டாத சிகரங்களை ஏறித் தொடுவதே அவள் லட்சியம். ஒரு மலையேற்றத்தில் தான் கணவனையே இழக்கிறாள். ஆனாலும் லட்சியத்தை இழந்தாளில்லை.
அதே சிகரம்தொடத் தனியாக முயல்கிறாள். அத்துவானக் காட்டில் ஒரு மனிதன் துணைக்கு வருகிறான்.
நரமாமிசம் தின்னி துரத்தல்
போகப் போகத் தெரிகிறது, அவன் ஒரு ‘நரமாமிசம் தின்னி’ என்று. அவன் துரத்தலிலிருந்து மீள்வதும், தொட நினைத்த சிகரத்தைத் தொடுவதும் மிச்சக் கதையின் உச்சம்.
காட்சிகளின் சாகசத்தில் உயிர் திரண்டு கண்ணில் தேங்கிவிடுகிறது. உடலும் மனமும் உறுதிப்பட்டால் ஒரு பெண் எதையும் சாதிப்பாள் என்ற பெருமிதம் எழுகிறது.
இதுவொரு படமல்ல; அறியாத பூகோளம்; அடையாத அனுபவம்” என்று மெச்சியுள்ளார்.
படத்தின் சிறப்பு
‘அபெக்ஸ்’ படம் மலையேற்றம், தப்பிப்பு, உயிர்வாழ்வுப் போராட்டம் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான காட்சியமைப்பும், பதற்றமான தருணங்களும் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றன.
கவிஞர் வைரமுத்துவின் இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
