காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற வாய்ப்பில்லை: தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

தமிழிசை சௌந்தரராஜன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசியல் சூழல் மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

தூத்துக்குடியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீநாத், இங்கிருந்து துறைமுக நகரமாக மாற்றுவதாகக் கூறியிருப்பதை குறிப்பிட்ட அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலில் தங்கள் தொகுதி நிலவரங்களையும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு

தூத்துக்குடி விளாத்திக்குளம் மாணவி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள சூழலில் பேசிய அவர், பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குத் தூக்கு தண்டனை அல்லது நேரடி என்கவுண்ட்டர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும், கோவை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சமீபத்தில் நடந்த குழந்தைக் கொலைகளைக் குறிப்பிட்டு, அரசு மற்றும் காவல்துறையின் அணுகுமுறை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற அமைப்பை உருவாக்கியிருப்பதைச் குறிப்பிட்ட அவர், ஆனால் இந்த அமைப்பு வலுவற்றதாக இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் விமர்சித்துள்ளன. எனவே, விஜய் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மையினர் ஆதரவு

விஜய் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறியுள்ளதைக் குறிப்பிட்ட தமிழிசை, “அனைவருமே சிறுபான்மையினருக்கு ஆதரவு அளித்தால், அவருக்கு வாக்களித்த பெரும்பான்மை மக்களின் ஆதங்கங்களை யார் தீர்ப்பது?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், குழந்தைக் கொலைகள் போன்ற உணர்ச்சிகரமான நிகழ்வுகளின் போது காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சிரித்துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, புதிய அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

காங்கிரஸ் மற்றும் கூட்டணி விமர்சனம்

காங்கிரஸ் கட்சி பதவி ஆசையினால் உடனடியாகத் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், “இந்த உலகம் இருக்கும் வரை காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற்று அமைச்சரவை அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார். அதேபோல், மாணிக்கம் தாகூர் கூறிய கருத்துக்களைக் கண்டித்த அவர், திமுக மற்றும் அதிமுக இடையேயான அரசியல் சூழலில் பாஜகவின் பங்கு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

#tamilisaiSoundararajan #congress #tvk #thoothukudi #politics #manickamTagore #தமிழிசை சௌந்தரராஜன் #மாணிக்கம் தாகூர் #பாஜக #காங்கிரஸ்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *