தூத்துக்குடியில் பின்னோக்கி வந்த சரக்கு வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தூத்துக்குடி விபத்து

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதியில் இன்று முற்பகல் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

சிவகளை கிழக்குத் தெருவைச் சேர்ந்த காலையா பிள்ளை என்பவரது மனைவியான செலியம்மாள் (80), இன்று காலை 11.45 மணியளவில் தனது வீட்டின் அருகிலுள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு வாகனத்தை அதன் ஓட்டுநர் திடீரென பின்னோக்கி இயக்கியுள்ளார்.

சாலையோரத்திலிருந்த செலியம்மாள் அந்த வாகனத்தைக் கவனிக்காத நிலையில், வாகனம் அவர் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த சாயர்புரம் காவல் நிலைய காவல்துறையினர் விரைந்து வந்து, மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஓட்டுநரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தூத்துக்குடி சிவராமங்கலம் பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த தண்டபாணியின் மகன் நம்பி துரை (35) என்பவர் அந்த வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

#toothukudi #accident #crimeNews #thoothukudi #tuticorin #தூத்துக்குடி

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *