சீனா கட்டிய விமான நிலையத்தால் நஷ்டம்; முதலீட்டாளர்களை தேடுகிறது இலங்கை அரசு

இலங்கையில் நஷ்டத்தில் இயங்கி வரும் ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தை லாபகரமானதாக மாற்ற அந்நாட்டு அரசு முதலீட்டாளர்களை தேடி வருகிறது.

ராஜபக்சே விமான நிலையத்தின் பின்னணி

நம் அண்டை நாடான இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பந்தோட்டை மாவட்டத்தின் மத்தல பகுதியில் அமைந்துள்ள ராஜபக்சே சர்வதேச விமான நிலையம், 2013-ல் திறக்கப்பட்டது. ‘உலகின் மிகவும் காலியான விமான நிலையம்’ என்று இது அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்த விமான நிலையத்துக்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

ஒரு கட்டத்தில் ஒரு விமானம் கூட வராத நிலை ஏற்பட்டதால், காலியான விமான நிலையம் என அழைக்கப்படுகிறது. இதனால், மின்சார கட்டணத்தை கூட ஈடுகட்ட தேவையான வருவாயை ஈட்ட முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. இது அரசுக்கு தொடர்ச்சியான சுமையாக உள்ளது.

சீனாவின் கடன் உதவியில் கட்டப்பட்ட விமான நிலையம்

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் பெயரில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தின் மதிப்பு, 1,965 கோடி ரூபாய். சீனா அரசின் கடனுதவியுடன், அந்நாட்டு நிறுவனங்களால் விமான நிலையம் கட்டப்பட்டது.

தலைநகர் கொழும்புவில் உள்ள நாட்டின் பிரதான சர்வதேச விமான நிலையத்தில், மோசமான வானிலையால் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டால், அரை மணி நேர விமான பயண தூரத்தில் உள்ள இந்த விமான நிலையத்தை ஒரு மாற்று இடமாக கருதப்படுகிறது.

குத்தகை முயற்சி தோல்வி மற்றும் புதிய முதலீட்டு தேடல்

இந்தியா – ரஷ்யா கூட்டு முயற்சியுடன் திட்டமிடப்பட்ட 30 ஆண்டுகால குத்தகை முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து நஷ்டத்தில் இயங்கும் மத்தல ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்திற்கு புதிய முதலீட்டு முன்மொழிவுகளை இலங்கை அரசு சமீபத்தில் கோரியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு சீன கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் திணறிய இலங்கை, இந்த விமான நிலையம் அருகே உள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தை, சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

#இலங்கை #விமான நிலையம் #சீனா #முதலீடு #பொருளாதாரம் #கடன் #சீனா கட்டிய விமான நிலையத்தால் நஷ்டம் #முதலீட்டாளர்களை தேடுகிறது இலங்கை அரசு

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *